தொடரும் மழையால் இலை வரத்து அதிகம் ;போதிய விலை இல்லாததால் அதிருப்தி

மஞ்சூர்: மஞ்சூரில் தொடரும் மழையால் இலை வரத்து அதிகரித்த போதிலும், போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மஞ்சூர் சுற்றுவட்டாரத்தில் தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் கோடை மழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. தென்மேற்கு பருவ மழை விரைவில் துவங்க உள்ள நிலையில் , கடந்த சில நாட்களாக அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், தேயிலை தோட்டங்களில் நல்ல ஈரப்பதம் ஏற்பட்டிருப்பதால் உரமிட்டு பராமரிக்கும் பணியில் விவசாயிகள் ஆர்வம் காட்டியுள்ளனர்.

அவ்வப்போது வெயில் தென்படுவதால் தேயிலை தோட்டங்களில் இலைகள் துளிர் விட்டு , அறுவடைக்கு தயாராகி வருகிறது. கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் தினசரி இலை கொள்முதல், 15 ஆயிரம் கிலோவாக அதிகரித்துள்ளது.

விவசாயிகள் கூறுகையில்,'மழையால் இலை வரத்து அதிகரித்திருப்பது மகிழ்ச்சி அளித்தாலும் , கூட்டுறவு தொழிற்சாலைகளில் பசுந்தேயிலை கிலோவுக்கு, 16 ரூபாய் நிர்ணயம் செய்யப்படுகிறது. எதிர்பார்த்த விலை கிடைக்காததால் விவசாயிகள் பொருளாதார நெருக்கடியில் தவிக்கின்றனர். விவசாயிகளின் நலன் கருதி மத்திய, மாநில அரசுகள் குறைந்த பட்ச விலை நிர்ணயம் செய்ய உரிய எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement