அ.தி.மு.க.,வில் மீண்டும் சசிகலா, தினகரன்?

12

- நமது நிருபர் -

அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்தவர்கள், நீக்கப்பட்டவர்களை, மீண்டும் இணைப்பதற்கான ரகசிய பேச்சு, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி தரப்பில் தொடங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின், அ.தி.மு.க.,வை பலப்படுத்த கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்ட நிர்வாகிகள் பலர், 'இடைத்தேர்தலுக்கு முன், அ.தி.மு.க.,வை பலப்படுத்த வேண்டும்; அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், சசிகலா போன்றோரை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும்' என, பழனிசாமியிடம் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

'அ.தி.மு.க., ஒன்றிணைய வேண்டும். மீண்டும் பழனிசாமி முதல்வராக வேண்டும்' என வலியுறுத்தி, தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகி மகேந்திரன் தீக்குளித்து மரணம் அடைந்த பின், பழனிசாமி மனமும் மாறியுள்ளது.

பிரிந்தவர்களை மீண்டும் சேர்க்க, மூத்த தலைவர் ஒருவரின் வாயிலாக ரகசிய பேச்சு தொடங்கப்பட்டு உள்ளது. சென்னை போயஸ் கார்டனில் உள்ள சசிகலா வீட்டில், சசிகலாவின் சகோதரர் திவாகரன், அவரது மகன் ஜெய் ஆனந்த் மற்றும் சசிகலா ஆதரவாளர்கள் ஆலோசனை நடத்தினர்.

அ.தி.மு.க.,வில் இணைந்தால், சசிகலாவுக்கு அவைத்தலைவர் பதவி வழங்க வேண்டும் என, அவரது ஆதரவாளர்கள் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அ.தி.மு.க.,வில் இணைய வேண்டும் என்றால், அவருக்கு துணை பொதுச்செயலர், ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்க வேண்டும் என, அவரது ஆதரவாளர்கள் நிபந்தனை விதித்துள்ளனர். இதை தொடர்ந்து, அ.தி.மு.க.,வில் ஆறு துணை பொதுச்செயலர் பதவி ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அ.தி.மு.க., நிர்வாகிகளில் 35 வயதுக்கு கீழ் யாரும் இல்லை. எனவே, இளைஞர்களை கட்சியில் சேர்க்க, வியூகம் வகுக்கப்படுகிறது. இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளில் அ.தி.மு.க., வெற்றி பெற்றாலே, கட்சியினர் த.வெ.க., செல்வது தடுக்கப்படும். எனவே, அ.தி.மு.க., வெற்றி பெற, இணைப்பு அவசியம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement