தகிக்கும் வெயிலில் முன் அறிவிப்பற்ற மின்தடை: சாகுபடி பணிகள் பாதிக்கும் அபாயம்

கன்னிவாடி:கன்னிவாடி மலையடிவார கிராமங்களில் வெயிலின் தாக்கம் ஒருபுறம் இருக்க முன் அறிவிப்பற்ற மின்தடையால் சாகுபடி பணிகளும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி, செம்பட்டி பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக போதிய மழையின்றி நீராதாரங்களில் தண்ணீர் குறைந்துள்ளது. குறைந்த நேரம் மட்டுமே விவசாய மும்முனை மின் விநியோகம் நடக்கிறது. போதாக்குறைக்கு அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இப்பிரச்னையால் வெங்காயம், பூ சாகுபடிகள் பணிகள் பாதிப்பதாக விவசாயிகள் புலம்புகின்றனர்.

இப்பகுதியினர் கூறுகையில், 'நகர்புறத்தை விட கன்னவாடி மலையடிவார கிராமங்களில் பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. முதியோர், குழந்தைகள் பராமரிப்பில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. பருவநிலை மாறுபாட்டால் தொற்று பாதிப்பும் ஏற்படுகிறது.

இதற்கிடையில் இரவு நேரங்களில் அடிக்கடி முன் அறிவிப்பற்ற மின்தடை நீடிக்கிறது. மின்சாதனங்கள் பழுதடைவதுடன் குறைந்த நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. இதனால் பூ, வெங்காயம், தக்காளி சாகுபடி பணிகள் பாதிக்கும் அபாயம் உள்ளது' என்றனர்.

Advertisement