இதே நாளில் அன்று

ஜூன் 4:

பிரிட்டனில் எம்.பி.,யாக இருந்த ஜோசப் ஹியூமின் மகனாக, கென்ட் நகரில், 1829ல் இதே நாளில் பிறந்தவர், ஆலன் ஆக்டேவியன் ஹியூம் எனும் ஏ.ஓ.ஹியூம்.

பிரிட்டிஷ் அரசு பணியாளராக இந்தியா வந்த இவர், உத்தர பிரதேசத்தின் எட்டாவா மாவட்ட கலெக்டர் ஆனார். 1857ல் நடந்த சிப்பாய் புரட்சியின் போது, கைதிகளிடம் கருணையுடன் நடந்தவர், 'புரட்சிக்கு காரணம் பிரிட்டிஷாரின் தவறான நிர்வாகம் தான்' என்றார்.

எட்டாவாவில் இலவச ஆரம்ப கல்வி, பெண் கல்வி, விதவை மறுமணம் உள்ளிட்ட சமூக சீர்திருத்தங்களை செய்தவர், 'லோகமித்ரா' என்ற ஹிந்தி நாளிதழையும் நடத்தினார்.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை துவக்கி, இந்தியர்களின் உரிமைகளுக்காக பாடுபட்டார். சிறந்த பறவையியல் ஆராய்ச்சியாளரான இவர், இந்திய பறவையியலுக்காக, 'ஸ்ட்ரே பெதர்ஸ்' என்ற இதழை நடத்தினார்.

சென்னை, அடையாறு பிரம்மஞான சபையில் சேர்ந்து, எட்டு ஆண்டுகள் அதன் துணை தலைவராக செயல்பட்டார். ஓய்வுக்கு பின் லண்டன் சென்றவர், தன் 83வது வயதில், 1912, ஜூலை 31ல் மறைந்தார்.

காங்., கட்சியின் தந்தை பிறந்த தினம் இன்று!

Advertisement