டெங்குவை ஒழிக்க 3.2 கோடி கொசுக்கள்

அமெரிக்காவின் புளோரிடா மற்றும் கலிபோர்னியா மாகாணங்களில் கிட்டத்தட்ட 3.2 கோடி கொசுக்களை வெளியிட, கூகுள் நிதி உதவி பெற்ற ஆய்வாளர்கள், அமெரிக்க அரசிடம் அனுமதி கோரியுள்ளனர். டெங்கு, ஜிகா, சிக்குன்குனியா உள்ளிட்ட நோய்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் அமெரிக்காவின் மிகப் பெரிய கொசு ஒழிப்பு சோதனையாக இது அமையப் போகிறது.

இதில் மனிதர்களுக்கோ விலங்குகளுக்கோ எவ்வித தீங்கும் விளைவிக்காத 'வோல்பாக்கியா' (Wolbachia) என்ற இயற்கையான பாக்டீரியா செலுத்தப்பட்ட ஆண் கொசுக்கள் மட்டுமே பயன்படுத்தப்படும்.

பட்டாம்பூச்சி, அந்துப்பூச்சி, வண்டு உள்ளிட்ட பூச்சிகளில் இந்த பாக்டீரியா இயற்கையாகவே காணப்படுகிறது. மனிதர்களைக் கடிக்காத இந்த ஆண் கொசுக்களின் ஒரே நோக்கம் இனப்பெருக்கத்தைத் தடுப்பது மட்டுமே.

இவை, காடுகளில் உள்ள சாதாரண பெண் கொசுக்களுடன் இணையும்போது உருவாகும் முட்டைகள் பொரியாது. இதன் வாயிலாக காலப்போக்கில் கொசுக்களின் எண்ணிக்கை பெருமளவு சுருங்கிவிடும்.

கூகுளின் 'டீபக் புராஜெக்ட்' நிறுவனத்தின் ஆறு கட்டத் தொழில்நுட்ப சோதனை ஏற்கனவே பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. கலிபோர்னியா சோதனையின் போது 95 சதவீத கொசுக்கள் ஒழிக்கப்பட்டன. சிங்கப்பூரில் இந்த முறையைப் பயன்படுத்திய ஓராண்டிற்குள் டெங்கு பாதிப்பு 70 சதவீதம் அளவுக்கு கணிசமாகக் குறைந்தது.

கொசு விரட்டிகளின் வாசனையை உணர்ந்து அதற்கேற்ப கொசுக்கள் தங்களை மாற்றிக்கொள்வதாக புதிய ஆய்வுகள் சொல்கின்றன. மேலும், தொடர்ந்து பயன் படுத்தப்படும் ரசாயனப் பூச்சிக் கொல்லிகளுக்கு, கொசுக்கள் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொண்டுள்ள நிலையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த உயிரியல் மாற்று முறை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement