மக்களின் உணர்வுக்கு மதிப்பளியுங்கள்; திருப்பரங்குன்றம் வழக்கில் அரசுக்கு ஐகோர்ட் அறிவுரை

13

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில், தனி நீதிபதி உத்தரவுப்படி தீபம் ஏற்றாததன் காரணமாக தாக்கலான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக அரசு தன் நிலைப்பாட்டை தெரிவிக்க, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

மதுரை மாவட்டம், எழுமலை ராம ரவிக்குமார் உள்ளிட்ட சிலர் தாக்கல் செய்த மனு அடிப்படையில், 2025 டிச., 1ல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 'வழக்கமான இடங்களை தவிர, திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணிலும் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்' என, உத்தரவிட்டார். உத்தரவை நிறைவேற்றாததால் தாக்கலான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிறப்பிக்கப்பட்ட பல்வேறு உத்தரவுகளுக்கு எதிராக, மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கலாகின.

இம்மனுக்கள் அனைத்தும் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், எம்.ஜோதிராமன் அமர்வு முன் ஏப்., 8ல் விசாரணைக்கு வந்தபோது, இவ்விஷயத்தில் சட்ட பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
தனி நீதிபதியின் உத்தரவிற்கு ஜூன் 4 வரை இடைக்கால தடை விதிப்பதாகவும், அடுத்தகட்ட விசாரணையின் போது,​தீபத்துாணில் தீபம் ஏற்றுவது தொடர்பான தன் நிலைப்பாடு, பரிந்துரைகளை மாநில அரசு தரப்பில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இன்று மீண்டும், இந்த அமர்வு முன், வழக்கு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், மூத்த வழக்கறிஞர் பாலாஜி, தர்கா தரப்பில் மூத்த வழக்கறிஞர் மோகன், ராம ரவிக்குமார் தரப்பில் வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் ஆஜராகினர்.

அரசு தரப்பு, 'இவ்வழக்கு சம்பந்தமாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி முடிவு செய்ய இரண்டு வாரம் அவகாசம் தேவை' என்றது.

ராம ரவிக்குமார் தரப்பு, 'முந்தைய தமிழக அரசு தான் உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவை செயல்படுத்தவில்லை. தற்போதைய அரசு அவ்வுத்தரவை செயல்படுத்தும் என நம்புகிறோம். அதனால் அரசுக்கு அவகாசம் அளிப்பதில் ஆட்சேபனை இல்லை' என, தெரிவித்தது.

தர்கா தரப்பு, 'தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக எங்கள் தரப்பின் மேல்முறையீட்டு மனுவை அனுமதிக்க வேண்டும்' என, கோரிக்கை வைக்கப்பட்டது.

ராம ரவிக்குமார் தரப்பு, 'ஏற்கனவே ஒரு உத்தரவின் மீது பலர் மேல்முறையீடு செய்துள்ளனர். அதனால் இவ்வழக்கில் தர்கா தரப்பு மேல்முறையீடுக்கு ஆட்சேபனை தெரிவிக்கிறோம்' என, தெரிவிக்கப்பட்டது.


நீதிபதிகள், 'நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதில் என்ன பிரச்னை உள்ளது. சாதாரண விஷயத்தை சிக்கலாக்க ஏன் முயற்சிக்கிறீர்கள் என, முந்தைய அரசிடமே தெரிவித்திருந்தோம். அதுவே இந்நீதிமன்றத்தின் நிலைப்பாடும் கூட. தனிநீதிபதியின் உத்தரவு செல்லுமா, செல்லாதா என, நாங்கள் முடிவு செய்து கொள்கிறோம்.

இது ஜனநாயக நாடு. மக்களின் உணர்வுக்கு மதிப்பளியுங்கள். இவ்விஷயத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து முதலில் தெரிவியுங்கள்' என, உத்தரவிட்டு, ஜூன் 22க்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Advertisement