அதிமுக விவகார வழக்குகள்: வாபஸ் பெற ஐகோர்ட் அனுமதி

சென்னை: அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கியதை எதிர்த்தும், 2022ம் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்தும் தாக்கல் செய்த உரிமையியல் வழக்குகளை திரும்ப பெற அனுமதித்த சென்னை உயர் நீதிமன்றம், அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2022ல், பழனிசாமி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என, அ.தி.மு.க., இரண்டாக உடைந்தது. இதையடுத்து, அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம், 2022ம் ஆண்டு ஜூலை 11ல் கூட்டப்பட்டது.

சிறப்பு தீர்மானம்



இதற்கு தடை கோரி, கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தடை விதிக்க மறுத்தது.

பொதுக்குழு கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப் பாளர் பதவிகளை கலைத்து, பொதுச்செயலர் பதவி உருவாக்கப்பட்டது.

பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கி, சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து நான்கு பேரும், உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன.

பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் தி.மு.க.,விலும், ஜே.சி.டி.பிரபாகர், த.வெ.க.,விலும் இணைந்துள்ளனர்.

உத்தரவு



இந்நிலையில், தாங்கள் தொடர்ந்த வழக்குகளை திரும்ப பெற அனுமதி கோரி, பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தரப்பில், உயர் நீதிமன்ற பதிவு துறைக்கு கடிதங்கள் அளிக்கப்பட்டன.

இந்த வழக்குகள் நீதிபதி கே.குமரேஷ் பாபு முன், நேற்று விசாரணைக்கு வந்தன. ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்த வழக்குகளை வாபஸ் பெற அனுமதித்து, வழக்குகளை முடித்து வைத்து, நீதிபதி உத்தரவிட்டார்.

அதேபோல், கட்சி கொடி, சின்னம் பயன்படுத்த, பன்னீர்செல்வம் தரப்பினருக்கு தடை விதிக்க வேண்டும் என, பழனிசாமி தாக்கல் செய்த வழக்கையும், திரும்ப பெற அனுமதித்த நீதிபதி கே.குமரேஷ்பாபு, அதையும் முடித்து வைத்து உத்தரவிட்டார்.

Advertisement