எரிசக்தி, வர்த்தக துறைகளில் ஒத்துழைப்பு மேம்படுத்த இந்தியா, வெனிசுலா பேச்சு

3

புதுடில்லி: ஐந்து நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள வெனிசுலா பொறுப்பு அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ், டில்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது, பல்வேறு துறைகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

துணை அதிபராக பல முறை இந்தியா வந்துள்ள டெல்சி ரோட்ரிக்ஸ், பொறுப்பு அதிபராக பதவியேற்ற பின் இந்தியா வருவது இதுவே முதல்முறை.அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மடூரோவை அமெரிக்கா சிறைபிடித்துள்ள நிலையில், கடந்த சில மாதங்களாக வெனிசுலாவிலிருந்து இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பு குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

இந்தியா, வெனிசுலா இடையேயான இருதரப்பு உறவு குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை மேற்கொண்டனர். எரிசக்தி, வர்த்தகம், சுகாதாரம், வாகனம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. சர்வதேச மற்றும் பிராந்திய அளவிலான சூழல் குறித்து பரஸ்பர நலன் சார்ந்த விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இரு தரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும், உலகின் தென் பகுதி நாடுகளின் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கவும் இரு தலைவர்களும் உறுதி பூண்டுள்ளனர்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

முதலீடு வாய்ப்புகள் குறித்து அறிந்து கொள்வதற்காக, டில்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள எரிசக்தி, மருந்து மற்றும் வாகனத்துறை சம்பந்தமான தொழிற்சாலைகளில் வெனிசுலா அமைச்சர்கள் ஆய்வு செய்ததாக வெளியுறவுத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

* கடந்த நிதியாண்டில் இருதரப்பு வர்த்தக மதிப்பு கிட்டத்தட்ட 6,450 கோடி ரூபாய்

* கடந்த மே மாத நிலவரப்படி, மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் வினியோக நாடாக வெனிசுலா உருவெடுத்துள்ளது


@block_B@ 'சிட்டி' தலைவர் சந்திப்பு

அமெரிக்காவை சேர்ந்த 'சிட்டி' பன்னாட்டு குழுமத்தின் தலைவர் ஜேன் பிரேசர், டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். மும்பையில் நடைபெறும் 'சிட்டி இந்தியா' மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா வந்துள்ள அவர், சர்வதேச முதலீடுகளை இந்தியாவுக்கு கொண்டு வருவது குறித்தும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் செயற்கை நுண்ணறிவு துறைகளில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் பிரதமருடன் பேச்சு நடத்தியுள்ளார். இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் தொழில் துவங்க ஆதரவளிப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டுள்ளது.block_B

Advertisement