கிருஷ்ணதேவராயர் கால கல்வெட்டு கண்டெடுப்பு

முதுமலை: யாக்கை மரபு அறக்கட்டளை அமைப்பை சேர்ந்த குமாரவேல் உள்ளிட்டோர், நீலகிரி பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்ட போது, முதுமலை புலிகள் காப்பக பகுதியில், மோயார் ஆற்று படுகைக்கு அருகில் பலகை கல்வெட்டை கண்டறிந்தனர். அது, கன்னட எழுத்துகளில் இருந்ததால், அதன் நகலை, மத்திய தொல்லியல் துறை கல்வெட்டியல் பிரிவுக்கு அனுப்பினர்.

கல்வெட்டியல் பிரிவு இயக்குநர் முனிரத்தினம் கூறியதாவது:

இந்த கல்வெட்டு, 1527, பிப்., 19ல் வெட்டப்பட்டுள்ளது. இதில், விஜயநகர பேரரசின் கீழ் இருந்த கொங்கு நாட்டு சீமையின் தண்டநாயக்கர் என்பவரும், கோட்டைச் சீமையின் பாலராசா என்பவரும் இணைந்து, நிலதானம் வழங்கிய தகவல் உள்ளது.

தானம் வழங்கப்பட்ட கிராமம், பாலராஜ வொடையா என்பவரின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாகவும், அய்யப்ப வொடையா என்பவரின் நிர்வாகத்தின் கீழும் இருந்துள்ளது.

இதன் வாயிலாக, 16ம் நுாற்றாண்டின் தொடக்கத்தில், நீலகிரி, மோயார் ஆற்றுப்படுகை பகுதி, விஜயநகர பேரரசின் நேரடி பார்வையில் இருந்துள்ளதை அறிய முடிகிறது.

இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement