கிராமங்களில் வளர்ச்சி பணிகள் முடக்கம்: உள்ளாட்சி தேர்தல் நடத்த வலியுறுத்தல்

திருவாடானை: ஊராட்சி தலைவர் தேர்தல் நடக்காததால் ஊராட்சிகளில் அடிப்படை வளர்ச்சி பணிகள் முடங்கியுள்ளன.திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் 47 ஊராட்சிகள் உள்ளன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள், வார்டு மெம்பர்கள் பொறுப்பில் இருந்தால் மட்டுமே கிராமங்களின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்ய முடியும். ஆனால் தேர்தல் தள்ளிப்போய்க் கொண்டே இருப்பதால் சிறப்பு அதிகாரிகள் மூலமாக பணிகள் அரைகுறையாக கவனிக்கப்பட்டு வருகிறது.

பொதுவாக மத்திய, மாநில அரசுகளின் நிதிக்குழு மானியங்கள் ஊராட்சிகளுக்கு பிரித்து வழங்கப்படும். தற்போது மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால் புதிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியும் தீர்ந்து விட்டதால் ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:

ஊராட்சி தலைவர் இருந்தால் தெருவிளக்கு எரியவில்லை என்றாலும், குடிநீர் வரவில்லை என்றாலும் வீட்டுக்கே போய் உரிமையாக கேட்கலாம். தற்போது அதிகாரிகளை தேடி போக முடியவில்லை. இதனால் கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. அடிப்படை வசதிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என்றனர்.

சில ஊராட்சி செயலர்கள் கூறுகையில், மத்திய, மாநில அரசுகளின் சிறப்பு நிதி வந்தால் மட்டுமே அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ள முடியும். தற்போதைய சூழலில் அன்றாட பராமரிப்புக்கே நிதி பற்றாக்குறை உள்ளது என்றனர்.

---

Advertisement