லாரி மீது பஸ் மோதி விபத்து ஆம்னி பஸ் டிரைவர் பலி

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில், லாரியின் பின்னால் தனியார் ஆம்னி பஸ் மோதிய விபத்தில் பஸ் டிரைவர் உயிரிழந்தார்.

சென்னை, அசோக் நகர், ஜாபர்கான்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுந்தரேசன் 46; தனியார் ஆம்னி பஸ் டிரைவர். இவர், பொள்ளாச்சியில் இருந்து சென்னைக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ்சை ஒட்டி சென்றார்.

நேற்று அதிகாலை 4:00 மணியளவில் உளுந்துார்பேட்டையில், விருத்தாசலம் செல்லும் சாலை மேம்பாலம் அருகே சென்ற போது, கோலமாவு ஏற்றிக் கொண்டு சேலத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற லாரியின் பின்னால் தனியார் ஆம்னி பஸ் மோதியது. இதனால் லாரி சாலையின் நடுவே உள்ளே சென்டர் மீடியனை தாண்டி நின்றது.

இந்த விபத்தில் ஆம்னி பஸ் டிரைவர் சுந்தரேசன் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். பஸ் பயணிகளுக்கு காயம் ஏதும் இல்லாமல் தப்பினர்.

உளுந்துார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, டிரைவர் சுந்தரேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement