மின்வாரியத்தில் ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கில் இருவர் கைது; 34 சாதனங்கள் மீட்பு; 2500ரூபாய்க்கு விற்றது அம்பலம்

24

நமது சிறப்பு நிருபர்



தமிழக மின்சார வாரிய தலைமையகத்தில் இருந்து ஹார்டு டிஸ்க்குகள் திருட்டு சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 34 ஹார்டு டிஸ்க்குகள் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

தமிழக மின் வாரியத்தில், 'டிரான்ஸ்பார்மர்'கள் கொள்முதலில் நடந்த, 397 கோடி ரூபாய் முறைகேடு குறித்து, சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்கு பதிந்துள்ள நிலையில், மின் வாரிய தலைமை அலுவலகத்தில், டெண்டர் ஆவணங்கள் இடம் பெற்ற'ஹார்டு டிஸ்க்'குகள் திருடப்பட்டு உள்ளன.

கடந்த மாதம், 20ம் தேதி, இதைக் கண்டறிந்த பொறியாளர் மலர்விழி, தன் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். மின் வாரிய அதிகாரிகள் நடத்திய விசாரணையில், மே, 16 மற்றும், 17 ஆகிய வார இறுதி நாட்களில், குறைந்த அளவு ஊழியர்கள் பணியில் இருந்த போது, ஹார்டு டிஸ்க் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இந்தத் திருட்டுகள் மே மாதம், இது இரண்டு நாட்களுக்கு முன்புதான் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே உள்ள வளர்புரத்தைச் சேர்ந்த 31 வயதான கோபிநாத் மற்றும் முரளி மனோகர் என அடையாளம் காணப்பட்டனர்.

தமிழக மின்சார வாரியத் தலைமையகத்திலிருந்து ஹார்டு டிஸ்க்குகளை திருடிய இடைத்தரகராக கோபிநாத்தையும், அவற்றை வாங்கிய பெறுநராக முரளி மனோகரையும் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். இது குறித்து போலீசார் கூறியதாவது: கோபிநாத் மே 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மின்சார வாரியத் தலைமையகத்திலிருந்து 34 ஹார்டு டிஸ்க்குகளைத் திருடியுள்ளார்.

பின்னர், அவர் அந்த சாதனங்களைத் தனது இல்லத்தில் வைத்து, அவற்றை பார்மட் செய்து, தரவுகளை அழித்த பிறகு பெங்களூருக்குக் கொண்டு சென்றுள்ளார். தலா ரூ.20,000 மதிப்புள்ள ஹார்டு டிஸ்க்குகள், ஒவ்வொன்றும் ரூ.2,500க்கு விற்கப்பட்டன. தற்போது 34 ஹார்டு டிஸ்க்குகள் மீட்கப்பட்டுள்ளது. மின்சார வாரியம் தொடர்பான கொள்முதல் மற்றும் ஒப்பந்தப்புள்ளி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நபர்களின் தொடர்பு குறித்தும் விசாரணை நடக்கிறது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

இந்த விசாரணை தமிழகத்தைத் தாண்டி விரிவடைந்துள்ளதாலும், இதில் பல்வேறு இடங்களைச் சேர்ந்த சந்தேக நபர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாலும், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றுவது குறித்து போலீசார் பரிசீலித்து வருகின்றனர். இதற்கிடையில், கோபிநாத் எழும்பூரில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். முரளி மனோகரும் காவலில் எடுக்கப்பட்டார். விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisement