உண்மையை உடைத்தார் அமைச்சர்; திமுக ஆட்சியிலேயே 264 சீட் மத்திய கோட்டாவுக்கு ஒப்படைப்பு

24

நமது நிருபர்




திமுக ஆட்சிக்காலத்திலேயே 264 உயர் சிறப்பு மருத்துவ படிப்பு இடங்கள் அகில இந்திய கோட்டாவுக்கு ஒப்படைக்கப்பட்ட உண்மையை, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் போட்டு உடைத்துள்ளார்.

தமிழகத்தில் உயர் சிறப்பு மருத்துவர் படிப்பில் ( சூப்பர் ஸ்பெஷாலிட்டி) காலியாக உள்ள இடங்களை அகில இந்திய கோட்டாவுக்கு ஒப்படைக்க கூடாது, உச்ச நீதிமன்றத்தில் முறையிட வேண்டும் என்று சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கூறியிருந்தார். அதற்கு பதில் அளிக்கும் வகையில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில், அரசு மருத்துவ கல்லுாரிகளில் உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்கு, 422 மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளன. இதில், 219 இடங்கள் மாநில ஒதுக்கீட்டில் உள்ளன; மற்ற இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு செல்கின்றன. கடந்தாண்டுகளில் கலந்தாய்வு முடிந்த பின், அரசு டாக்டர்கள் வாயிலாக நிரப்ப முடியாத இடங்கள் அனைத்தும், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு 'சரண்டர்' செய்யப்பட்டு உள்ளன.

இதை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி அறிவாரா? நாம் சரண்டர் செய்த பின், 'கட் ஆப்' மதிப்பெண்ணை குறைத்து, அதன் அடிப்படையில் நமக்கு கிடைக்க வேண்டிய இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்பட்டன. இதனால், தமிழக அரசு டாக்டர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதையும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி அறிவாரா?

கடந்த 2024ல், 119 இடங்கள்; கடந்தாண்டில், 145 இடங்கள் என, 264 இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு சென்றன என்பது வரலாறு. அதேநேரம், கடந்தாண்டில் , மாநில ஒதுக்கீட்டு இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு செல்லாமல் தடுக்கப்பட்டது என்பது உண்மைக்கு புறம்பானது. இந்தாண்டு, 151 இடங்கள் மாநில கலந்தாய்வில் நிரப்பப்படாமல் இருந்தாலும், அவற்றை சரண்டர் செய்ய மறுத்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம்.


அதில், 151 இடங்களை, அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு சரண்டர் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனாலும், மாநில ஒதுக்கீட்டு இடங்கள் அனைத்தும், தமிழக டாக்டர்கள் வாயிலாக நிரப்பப்பட வேண்டும் என்பதற்காக, உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளோம்.

கிராமப்புற மக்களுக்கு உயரிய மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதிலும், மாநில உரிமை சார்ந்த இட ஒதுக்கீடு நிலைப்பாட்டிலும், த.வெ.க., எப்போதும் உறுதியுடன் செயல்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement