ஆட்சி நடப்பதே நம்முடைய தயவில் தான்: சொல்கிறார் ஸ்டாலின்

54

சென்னை: ''இப்போது ஆட்சி நடப்பதே நம்முடைய தயவில் தான்,'' என முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.


செங்கல்பட்டு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கஜேந்திரன், அவரது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். இணையும் விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: எப்பொழுதும் ஒரு இயக்கத்தில் இருந்து இன்னொரு இயக்கத்திற்கு பிரிந்து போகிறார்கள் என்று சொன்னால் ஏதோ ஒரு லாபத்தை அடிப்படையாக வைத்து, ஏதாவது வசதியை மனதில் கொண்டு ஆளுங்கட்சியை நோக்கி தான் போவது உண்டு.

இன்றைக்கு திமுக ஆளுங்கட்சியாக இருந்து எதிர்க்கட்சியாக மாறி இருக்கிறது. எதிர்க்கட்சியை நோக்கி வந்து இருக்கிறீர்கள் என்று சொன்னால் பதவிக்காக நீங்கள் வரவில்லை. சொகுசாக வாழ வேண்டும் என்பதற்காக வரவில்லை, பணியாற்ற வேண்டும் இந்த இயக்கத்திற்கு துணை நிற்க வேண்டும்.

வெற்றி, தோல்வி




தமிழ் சமுதாயத்திற்கு பாடுபட வேண்டும், இழந்து இருக்கும் ஜனநாயகத்தை மீட்க வேண்டும் என்ற உணர்வோடு வந்து இருக்கிறீர்கள். திமுகவை பொறுத்தவரை வெற்றி, தோல்வி என்பது மாறி மாறி வரும். அதற்காக வெற்றியை கண்டு என்றைக்கு வெறி கொண்டு அலைந்து இருப்பது இல்லை.

தோல்வியை கண்டு என்றைக்கும் துண்டு விடமால் பணியாற்ற கூடியவர்கள் திமுகவினர் என்பதை நிரூபித்துக்கொண்டு இருக்கிறோம். வெற்றி வாய்ப்பை நாம் இழந்து இருந்தாலும் ஆட்சி பொறுப்பை நாம் இழந்து இருந்தாலும் எதிர்க்கட்சி என்ற நிலையில் பணியாற்றிக்கொண்டு இருக்கிறோம்.

முற்றுப்புள்ளி




இப்போது ஆட்சி நடப்பதே நம்முடைய தயவில் தான். நமது கூட்டணி கட்சிகளின் தயவோடு தான் இன்றைக்கு இந்த ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. நமது கூட்டணி கட்சி தலைவர்கள் சொல்லிவிட்டு போகும் போது நான் சொன்னேன், 'செல்லுங்கள் உங்களுடைய விருப்பம், ஜனநாயகத்தை நான் தடுக்க மாட்டேன்.

நாட்டில் ஜனாதிபதி ஆட்சி வந்து விடக்கூடாது; அதன் அடிப்படையில் பாஜ வந்துவிடக்கூடாது' என்பதற்கு தான், வழியனுப்பி வைத்தேன். நமது தயவோடு நடைபெறும் இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க நாம் உறுதியேற்று பணியாற்றுவோம்.இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

சிறப்பு வீடியோ!

கூட்டணி கட்சிகளை வழியனுப்பி வைத்தேன்: ஸ்டாலின் பரபரப்பு பேச்சு; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்


Advertisement