விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாம்

வானுார்: வானுார் அடுத்த வி. புதுப்பாக்கம் கிராமத்தில் வேளாண் நிலங்களை பாதுகாக்கும் இயக்கத்தின் சார்பில், ‘கேத் பச்சாவ் அபியான்’ என்ற விழிப்புணர்வு முகாம் நடந்தது.

வேளாண் அலுவலர் ரேவதி வரவேற்றார். வானுார் வேளாண் உதவி இயக்குநர் எத்திராஜ்  தலைமை தாங்கி இயற்கை வேளாண்மை மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்தும், ஆரோக்கிய உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் சமையல் எண்ணெய் பயன்பாட்டை 10 சதவீத அளவு குறைப்பதன் அவசியம் குறித்தும் பயிற்சி அளித்தார்.

மேலும், மண் பரிசோதனை, ஊட்டச்சத்து மேலாண்மை, அங்கங்க மற்றும் இயற்கை உர பயன்பாடு, பசுந்தாள் உர பயன்பாடு குறித்தும்,  குறைந்த உர பயன்பாடு மூலம் சாகுபடி செலவை குறைத்தல் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

வி. புதுப்பாக்கம் ஊராட்சி தலைவர் வேலு முன்னிலை வகித்தார். கால்நடை டாக்டர் சுந்தரபாண்டியன் ஆத்மா திட்டத்தின் கீழ் ஆடு மற்றும் செம்மறி ஆடு வளப்பு குறித்து பயிற்சி அளித்தார். பயிற்சியில் 40க்கு மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

வட்டார தொழில் நுட்ப மேலாளர் உஷா நன்றி கூறினார். 

ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் கோவிந்தசாமி, சந்திரசேகர் ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement