பெண்கள், குழந்தை பாதுகாப்பு உறுதி செய்யப்படும்: புதிய போலீஸ் கமிஷனர் கபில்குமார் சரத்கர் பேட்டி

மதுரை: மதுரையில் பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்படும்; குற்றங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என புதிதாக பொறுப்பேற்ற கபில்குமார் சரத்கர் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: நகரில் பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்படும். அவர்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்கவும், புகார் மீதான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும். 'சிங்கப்பெண்' படை செயல்பாட்டிற்குபின் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும்.

இளைஞர்களிடையே போதைப் பொருட்கள் பழக்கம் அதிகரித்துள்ளது. அதை தடுப்பது சவாலாக உள்ளது. இதற்கான பாதுகாப்புகள் கட்டமைக்கப்பட்டு பலப்படுத்தப்படும். போதைப் பொருட்கள் வினியோகிப்போர் மீது கடும் நடவடிக்கைகள் பாயும்.

மதுரை ரவுடிகள் கலாசாரம், ஜாதி ரீதியிலான பிரச்னைக்கு பெயர் போனது. இங்கு பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள் அவற்றை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதற்கு எதிரான நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும்.

மக்களின் பேராசை, அறியாமையால் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்துள்ளன. பலர் பணத்தை இழந்துள்ளனர். இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். சைபர் கிரைம் குற்றங்கள் மீதான விசாரணை துரிதப்படுத்தப்படும். தேவை இருப்பின் பிற மாநிலங்களுக்கு சென்றும் விசாரணை மேற்கொள்ளப்படும்.

போக்குவரத்து பிரச்னையை தீர்க்க, விதிமுறைகளை செயல்படுத்துவதில் தீவிரம் காட்டப்படும். போலீசார் நடந்து ரோந்து செல்லும் முறை செயலுக்கு வரவுள்ளது. இதன் மூலம் மக்கள், ஏரியா பிரச்னைகளை இன்னும் ஆழமாக கண்காணிக்க முடியும். இவ்வாறு கூறினார்.

துணை கமிஷனர்கள் மதிவாணன் (வடக்கு), வனிதா (போக்குவரத்து), பிரபகாரன் (ஏ.ஆர்.,), உதவி கமிஷனர் பெத்துராஜ் (ஐ.எஸ்.,) உடனிருந்தனர்.

Advertisement