வீட்டை விற்க மறுத்த பேராசிரியரை அடித்து கொலை செய்த தம்பதி கைது

புதுடில்லி: வீட்டை விற்க மறுத்த பெண் பேராசிரியையை, அவரது வீட்டில் வாடகைக்கு வசித்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தம்பதி அடித்து கொலை செய்த சம்பவம் டில்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



டில்லி பல்கலைக்கு உட்பட்ட சிவாஜி கல்லுாரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றியவர் தேவஸ்மிதா பால், 49. மேற்கு வங்கத்தின் பர்த்வான் பகுதியை சேர்ந்த இவர், கணவரை பிரிந்து டில்லி புது அசோக் நகர் பகுதியில் உள்ள அவரது சகோதரி தேவரதி வீட்டில் தனியாக வசித்தார். இந்நிலையில், கடந்த 3ம் தேதி அவர் தங்கியிருந்த வீட்டில் தேவஸ்மிதா பால் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.



அதேபகுதியில் வசிக்கும் சகோதரி தேவரதி மறுநாள் தேவஸ்மிதா வீட்டுக்கு வந்த பார்த்தபோது, அவர் சடலமாக கிடந்தார். இதையடுத்து, போலீசில் புகாரளிக்கப்பட்டது. கொலை நடந்த வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் சோதனையிட்டதில், ஒரு தம்பதி வீட்டுக்குள் செல்வதும், 30 நிமிடங்களுக்கு பின் வேறொரு உடையில் அவர்கள் திரும்பி சென்றதும் தெரியவந்தது.



விசாரணையில், இருவரும் சேர்ந்து இரும்பு கம்பியால் தேவஸ்மிதாவை தாக்கி கொன்று விட்டு தப்பியது தெரியவந்தது. மேற்கு வங்கத்துக்கு தப்ப இருந்த நிலையில், அவர்களை டில்லி போலீசார் நேற்று கைது செய்தனர். மேற்கு வங்கத்தில் தேவஸ்மிதாவின் வீட்டில் தம்பதி வாடகைக்கு வசித்து வந்த நிலையில், அந்த வீட்டை விற்க மறுத்தை அடுத்து அவரை இருவரும் கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement