உளுந்துார்பேட்டை அருகே சாலையில் சென்ற கார் தீப்பிடித்து எரிந்து சேதம்

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த ஆவட்டி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் மகன் ராஜேஷ், 26; இவர் சென்னை மதுரவாயில் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது தாய் ராஜதரணி, 54; சென்னை மதுரவாயில் பல்லவன் நகர் பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம், 46; ஆகிய மூவரும், துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து ஆவட்டிக்கு டி.என்.04.ஏ.எம்.2122 பதிவு எண் கொண்ட நிசான் காரில் சென்றனர்.

நேற்று மாலை 4.10 மணியளவில் உளுந்துார்பேட்டை அடுத்த எறஞ்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்ற போது, காரின் முன் பகுதி புகையுடன் தீ பிடித்து எரிய துவங்கியது. உடன் காரில் இருந்தவர்கள் சுதாரித்துக் கொண்டு காரை சாலையோரம் நிறுத்திவிட்டு கீழே இறங்கி உயிர்த்தப்பினர். அதற்குள் கார் தீப்பிடித்து முழுவதும் எரிந்து சேதமடைந்தது.

தகவல் அறிந்த உளுந்துார்பேட்டை தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு தவிர்க்கப்பட்டது.

இது குறித்து எடைக்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement