உதயநிதிக்கு முதல் மரியாதை; ஸ்டாலின் திடீர் அதிர்ச்சி

2

சென்னை: சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின் தி.மு.க., நிர்வாகிகள், கட்சி தலைவர் ஸ்டாலினை சந்திப்பதை விட, உதயநிதியை சந்திக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
கருணாநிதி உயிருடன் இருந்தவரை, பல மோசமான தோல்விகளை தி.மு.க., சந்தித்துள்ளது.

முதல்வராக இருந்தபோதும், தினமும் கட்சி தலைமை அலுவலகமான அறிவாலயம் வருவதை, வாடிக்கையாக வைத்திருந்தார். இதனால், தி.மு.க., வென்றாலும், தோற்றாலும், கருணாநிதியை கட்சி நிர்வாகிகள் சந்திக்க முடிந்தது. ஆனால், ஸ்டாலின் முதல்வரான பின், அறிவாலயம் வருவதை தவிர்த்து விட்டார். கட்சி தொண்டர்களுடன் எவ்வித தொடர்பும் இல்லாதவராக ஸ்டாலின் இருந்தார்.

சட்டசபை தேர்தலில், தி.மு.க., தோல்வியடைந்ததோடு, முதல்வராக இருந்தும் கூட, கொளத்துார் தொகுதியில் ஸ்டாலின் தோல்வி அடைந்தார். அதன்பின், அறிவாலயத்துக்கு தினமும் ஸ்டாலின் வந்தாலும், தோல்வியில் இருப்பவரை சந்தித்து, அவரை கஷ்டப்படுத்த வேண்டாம் என கருதி, பலரும் அறிவாலயம் வருவது இல்லை.

தோல்வி குறித்து பேச முற்படும் கட்சி நிர்வாகிகளிடம், 'தோல்வியை கண்டறிய குழு அமைத்துள்ளேன்; அவர்களிடம் சொல்லுங்கள்' என கூறி விடுகிறார்.

இன்னும் சில ஆண்டுகளில், உதயநிதி தான், தி.மு.க., தலைமை பதவிக்கு வரப் போகிறார். அவரும் முன்பு போல் இல்லாமல், கட்சியினரை சந்திக்க தொடங்கி உள்ளார். எனவே, ஸ்டாலினை சந்தித்து, எந்த பயனும் இல்லை என நினைக்கும் கட்சி நிர்வாகிகள், உதயநிதியை சந்திக்க ஆர்வம் காட்டுகின்றனர்.

உதயநிதியின் இல்லத்துக்கு சென்று, அவரை பார்த்த பின், நேரமிருந்தால் ஸ்டாலினை பார்க்க அனுமதி கேட்கின்றனர். கட்சியினரின் இந்த செயல், ஏற்கனவே தோல்வி வருத்தத்தில் உள்ள ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement