மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் இன்று துவக்கம்
புதுச்சேரி: சென்டாக் கவுன்சிலிங் மாற்றுத்திறனாளிகளுக்கானசிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்த மாணவர்களின் சேர்க்கையை முறைப்படுத்தும் நோக்கில் முக்கிய அறிவிப்புவெளியிட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டின் கீழ் சென்டாக்கில் விண்ணப்பித்துள்ள மாணவர்களின் மாற்றுத்திறன் தன்மையையும், அதற்கான சதவீதத்தையும் துல்லியமாகக் கண்டறிவது அவசியமாகும். இதன் மூலமே தகுதியான மாணவர்களுக்கு உரிய முறையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்ய முடியும்.
இதற்காக, விண்ணப்பித்துள்ள அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்களும் பூர்வாங்க மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளனர்.
மாவட்ட மருத்துவக் குழுவின் நேரடி கண்காணிப்பில் இந்த ஆய்வு மற்றும் மாற்றுத்திறன் சதவீத மதிப்பீடு நடைபெறவுள்ளது.
இந்த சிறப்பு மருத்துவப் பரிசோதனையானது இன்று 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு நடைபெற உள்ளது.
மாணவர்கள் தங்களின் பரிசோதனைகளை மேற்கொள்ள ஏதுவாக, தினமும் காலை 8:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை இதற்கான நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட நான்கு பிராந்தியங்களைச் சேர்ந்த மாணவர்களும் தங்களின் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் ஆஜராக வேண்டும். அங்குள்ள குடியிருப்பு மருத்துவ அதிகாரி முன்னிலையில் இப்பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.
புதுச்சேரி பிராந்திய மாற்றுத்திறன் மாணவர்கள், இந்திரா காந்தி அரசு மருத்துவமனை மற்றும் முதுகலை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு செல்ல வேண்டும்.
காரைக்கால், மாகே, ஏனாம் பிராந்திய மாணவர்கள் அந்தந்த அரசு மருத்துவனைக்கு செல்ல வேண்டும் என, சென்டாக் அறிவித்துள்ளது.
@block_B@
மருத்துவக் குழுவின் பரிசீலனைக்கு வரும் மாணவர்கள் தங்களின் தகுதியை நிரூபிக்க சமீபத்தில் எடுக்கப்பட்ட மூன்று பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், ஆதார் அட்டையின் நகல், தற்போது சமர்ப்பிக்கப்பட்ட சென்டாக் விண்ணப்பப் படிவத்தின் நகல், ஏற்கனவே அரசிடமிருந்து பெற்ற மாற்றுத்திறனாளி சான்றிதழ் அசலாகவும், நகல்களாகவும் தவறாமல் கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.block_B