பெயர்ந்து விழுந்த சீலிங் வக்கீல்கள் அதிர்ச்சி

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பழைய தாலுகா அலுவலக வளாகத்தில், ஜே.எம்., 2 கோர்ட் செயல்படுகிறது. கோர்ட் கட்டடம் போதிய பராமரிப்பின்றி உள்ளது. இந்நிலையில், நேற்று மதியம் திடீரென உட்புற கூரையின் பால் சீலிங் பெயர்ந்து விழுந்தது. யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.

அதன்பின், பெயர்ந்து விழுந்த சீலிங் அகற்றப்பட்டது. இது குறித்து மாவட்ட நீதிபதிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதாக வக்கீல்கள் தெரிவித்தனர்.

வக்கீல் மீரான் மொய்தீன் கூறுகையில், ‘‘கோர்ட் கட்டடம் பழுதடைந்துள்ளது. உடனடியாக புதிய கோர்ட்டுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும். கோர்ட்டில் யாரும் இல்லாத நிலையில், பால் சீலிங் விழுந்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது,’’ என்றார்.

Advertisement