சில மணி நேர இடைவெளியில் கியூபா - ஈரானில் நிலநடுக்கம்

ஹவானா: சில மணி நேர இடைவெளியில் உலகின் இருவேறு பகுதிகளில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ஆனால், இரு நிகழ்வுகளிலும் உயிர் சேதமோ அல்லது கட்டட சேதங்களோ ஏற்பட்டதாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

கரீபியன் கடல் தீவு நாடான கியூபாவின் வடமேற்கு கடற்கரையில் ஜூன்8 இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது. கியூபாவின் மாண்டுவாவிற்கு வடமேற்கே 104 கி.மீ., தொலைவில், 26 கி.மீ., ஆழத்தில் இது ஏற்பட்டதாக கியூபா பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்தது.

இந்நிலநடுக்கம் கியூபா முழுதும் உணரப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கரீபியன் கடல் பரப்பு முழுதும் பரவி, மெக்சிகோ மற்றும் அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் வரை உணரப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 1880ம் ஆண்டிற்கு பின், கியூபா சந்தித்த வலுவான நிலநடுக்கம் இதுவாகும்.

இதற்கு சில மணி நேரங்களுக்குள், 12 ஆயிரம் கி.மீ., தொலைவில் உள்ள மேற்காசிய நாடான ஈரானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஹார்மோஸ்கன் மாகாணத்தின் சர்காஸ் அருகே, நேற்று அதிகாலையில், 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 22 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்டதாக ஈரானிய நில அதிர்வு ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

Advertisement