அசைக்க முடியாத ஆதரவை வழங்குவதாக வடகொரியாவுக்கு சீன அதிபர் ஜின்பிங் உறுதி

பீஜிங்: சீனா - வடகொரியா இடையேயான 'நட்புறவு மற்றும் பரஸ்பர உதவி ஒப்பந்தம்' ஏற்படுத்தப்பட்டு 65 ஆண்டுகளாவதையொட்டி, இரண்டு நாள் அரசு முறை பயணமாக வடகொரியா சென்றுள்ள சீன அதிபர் ஷீ ஜின்பிங், அந்நாட்டு தலைவர் கிம் ஜாங் உன்னுக்கு அசைக்க முடியாத ஆதரவை அளிப்பதாக உறுதியளித்தார்.

நம் அண்டை நாடான சீனாவுக்கும், கிழக்காசிய நாடான வடகொரியாவுக்கும் இடையே நட்பு மற்றும் துாதரக உறவுகள், 1949ல் தொடங்கியது. கடந்த 1961 ஜூலை 11ல் இரு நாடுகளுக்கு இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி, இந்த இரு நாடுகளில் ஒன்றின் மீது வேறெந்த நாடும் தாக்குதல் நடத்தினால், நட்பு நாடு என்ற முறையில் பரஸ்பரம் ராணுவ ஒத்துழைப்பு வழங்கப்படும்.

இந்த ஒப்பந்தத்தின் 65வது ஆண்டை குறிக்கும் வகையில்தான் ஜின்பிங் தற்போது வடகொரியாவுக்கு இரண்டு நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

சமீப காலமாக கிம், ரஷ்யா உடனான உறவை ஆழப்படுத்தி வருகிறார். உக்ரைனுடனான போரில் கூட தங்கள் நாட்டு வீரர்களை ரஷ்யாவுக்கு அனுப்பி கிம் உதவி செய்து வருகிறார். ரஷ்யாவுடன் வடகொரியா காட்டி வரும் இந்த நெருக்கம் தற்போது சீனாவுக்கு அசவுகரியத்தை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆகையால், தன்னுடைய நீண்டகால உறவை புதுப்பிக்கும் வகையில் ஜின்பிங் இப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

இருவரும் சந்தித்து, இரு தரப்பு உறவுகள், சர்வதேச விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினர். அப்போது, 'சர்வதேச சூழ்நிலை எவ்வாறு மாறினாலும், சீனா - வடகொரியா இடையேயான பாரம்பரிய நட்பில் கொண்டுள்ள உறுதியான நிலைப்பாடு என்றும் மாறாது. கிம் ஜாங் உன் தலைமையிலான அரசுக்கான அசைக்க முடியாத ஆதரவும் மாறாது' என, ஜின்பிங் உறுதி அளித்தார்.

Advertisement