கருணாநிதிக்காக போராடிய திமுகவினர் கோர்ட்டில் கல் வீசிய சம்பவம்: 25 ஆண்டுக்குப் பின் சிறைத்தண்டனை!

3

மதுரை: 25 ஆண்டுக்கு முன் முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்திய திமுகவினருக்கு தற்போது 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

25 ஆண்டுகளுக்கு முன்பு, அன்றைய மத்திய அமைச்சர் முரசொலி மாறன் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோர் நள்ளிரவில் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கடந்த 2001ம் ஆண்டு நடந்த இந்தச்சம்பவத்தைத் தொடர்ந்து, மதுரையில் திமுகவினர் போராட்டம் நடத்தினர்.

திடீர் நகர் பகுதியில் மரியலில் ஈடுபட்ட திமுகவினரில் மாறன் உள்ளிட்ட சிலரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது, நீதிமன்ற வளாகத்திற்குள் மாறன் உள்ளிட்டோர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். நீதிமன்றத்திற்கு அருகிலிருந்த அறிவிப்புப் பலகை மற்றும் மூன்று நீதிமன்ற அறைகளின் ஜன்னல் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டன.

இந்த வன்முறைக் குழுவைத் தடுக்க முயன்றபோது, ஆய்வாளர் வானமாமலைக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது.

ரூ.730 மதிப்புள்ள நீதிமன்ற சொத்துக்களைச் சேதப்படுத்தியது மற்றும் வன்முறையில் ஈடுபட்டதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் திமுக நிர்வாகி மாறன் உள்ளிட்ட பலர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இந்த நிலையில், 25 ஆண்டுகளுக்குப் பிறகு, பொதுச்சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட இருவர் உயிரிழந்தனர். இருவர் தலைமறைவாகி விட்டனர். மீதமிருந்த மாறன் உள்ளிட்ட மூவருக்கு நேற்று முன்தினம் (ஜூன் 10) 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement