பூனைகள் சண்டையால் மோதல் 20 பேர் மீது வழக்கு பதிவு

ஷிவமொக்கா: இந்திய பூனை, வெளிநாட்டு பூனை இடையே ஏற்பட்ட மோதல், இரண்டு குடும்பங்கள் இடையே, அடிதடிக்கு காரணமானது. 20 பேர் மீது வழக்கு பதிவாகியுள்ளது.

ஷிவமொக்கா மாவட்டம், தீர்த்தஹள்ளி தாலுகாவின், மேகரவள்ளி கிராமத்தில் வசிப்பவர் நாகபாத்ரி ராஜசேகர். இவரது வீட்டில் வெளிநாட்டு பூனை வளர்க்கிறார். இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் நாகராஜ் என்பவர், உள்நாட்டு பூனை வளர்க்கிறார்.

நாகராஜின் பூனை நேற்று மதியம், வெளியே நின்றிருந்த ராஜசேகரின் வெளிநாட்டு பூனையுடன் சண்டை போட்டு கடித்து காயப்படுத்தியது.

இதனால் இருவரின் குடும்பத்தினருக்கும், கடுமையான வாக்குவாதம் நடந்தது.

அவரவர் பூனைக்கு ஆதரவாக பேசினர். ஒரு கட்டத்தில், வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் இருவர் காயமடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

ஆகும்பே போலீஸ் நிலையத்தில், நாகபாத்ரி ராஜசேகர் மற்றும் நாகராஜ் குடும்பத்தினர் பரஸ்பரம் புகார் அளித்தனர். புகாரின்படி 20 பேர் மீது, வழக்கு பதிவாகியுள்ளது.

Advertisement