இஸ்ரேலிய குடியேறிகள் மீது பிரிட்டன் உள்ளிட்ட 5 நாடுகள் பொருளாதார தடை

3

ஜெருசலேம்: மேற்கு கரை வன்முறை காரணமாக இஸ்ரேலிய குடியேறிகள் மீது கனடா, பிரிட்டன் உள்ளிட்ட 5 நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன.

பாலஸ்தீன பொதுமக்களுக்கு எதிராக தீவிரவாத இஸ்ரேலிய குடியேறிகள் நடத்தி வரும் கொடூரமான வன்முறைச் சம்பவங்களுக்கு அவர்களைப் பொறுப்பேற்க வைக்கும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ஆஸ்திரேலியா உள்ளிட்ட ஐந்து நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மேற்குக்கரை பகுதியில் வன்முறையைத் தூண்டுவதற்கும், அதற்கு நிதியுதவி அளிப்பதை தடுக்கும் விதமாக, பிரிட்டன், கனடா, பிரான்ஸ் மற்றும் நார்வே ஆகிய நாடுகள் ஒரு புதிய ஒருங்கிணைந்த பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளன. இஸ்ரேலிய குடியேறிகளால் அதிகரித்து வரும் வன்முறையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறையானது, பலஸ்தீன நாடு உருவாவதற்கான வாய்ப்புகளைச் சீர்குலைக்கும் நோக்கில் செய்யப்படுவதாக தூதரக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்கு கரை பகுதியில் பாலஸ்தீனர்களே பெரும்பான்மையானவர்களாக இருக்கின்றனர். இப்பகுதியில் மிகவும் குறைந்த அளவிலான இஸ்ரேலியர்கள் குடியேறியுள்ளனர். உலகின் பெரும்பாலான நாடுகளும் ஐநாவின் பல்வேறு அமைப்புகளும் இத்தகைய குடியேற்றங்களை சர்வதேச சட்ட மீறலாகக் கருதுகின்றன. இருப்பினும், இந்தப் பகுதியுடன் தங்களுக்கு வரலாற்று ரீதியான தொடர்புகள் இருப்பதாகக் கூறி இஸ்ரேல் இதனை மறுத்து வருகிறது.

Advertisement