அப்போ அணில்; இப்போ 'பியூஸ் கேரியர்'; மின் தடை குறித்து பழனிசாமி கிண்டல்

27

சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிக்கை: தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின் தடையால் அனைத்துத் துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. எதிர்கால தேவைக்கேற்ப உற்பத்தி, கொள்முதல், உட்கட்டமைப்பு திட்டமிடல் இல்லை. தமிழக மின் தேவை, 2026 - 27ம் ஆண்டில், 23,013 மெகாவாட் வரை செல்லும் என்று, மத்திய மின்சார ஆணையம் கணித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் கோடையில் மின் தேவை அதிகரிப்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால், முன்கூட்டியே திட்டமிடல் நடக்கவில்லை. சென்னை முதல் கன்னியாகுமரி வரை, இரவில் மின் தடையால், குழந்தைகள் துாங்க முடியவில்லை. தொழிற்சாலை, விவசாய பம்ப் செட் மோட்டார்கள் இயங்க முடியவில்லை.

ஆனால், அமைச்சரோ, 'பியூஸ் கேரியர் திருட்டு' என்று விளக்கம் அளிக்கிறார். தமிழகம் முழுதும் ஒரே நேரத்தில், பியூஸ் கேரியர் திருட்டு போனாதா? கடந்த தி.மு.க., ஆட்சியின் நீட்சியாகவே, இந்த பொய்க்கால் குதிரை அரசு இருக்கிறது.

கடந்த ஆட்சியில், 'மின் தடைக்கு அணில்கள் காரணம்' என்றனர். தற்போதைய அணில் குஞ்சுகள் ஆட்சியில், 'பியூஸ் கேரியர் திருட்டு' என காரணம் சொல்லப்படுகிறது. இதுபோன்ற சால்ஜாப்பு பேச்சுகளை பேசாமல்; காரணத்தை தேடி நேரத்தை வீணாக்காமல், தடையில்லா மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement