புதுச்சேரியை உலுக்கிய மின்தடை 22 மணி நேரத்திற்கு பின் முடிவுக்கு வந்தது

புதுச்சேரி: புதுச்சேரி நகரப் பகுதி முழுதும் நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு திடீர் மின் தடை ஏற்பட்டு இருளில் மூழ்கியது. இரவு முழுதும் அனல் காற்று வீசிய நிலையில், மின்சாரமும் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

வில்லியனுார் மின் துணை நிலையத்தில் உள்ள மெகா டிரான்ஸ்பார்மர்கள் வெடித்து சிதறியதால், இந்த திடீர் மின் தடை ஏற்பட்டதாக மின் துறை விளக்கம் அளித்தது.

ஒரே நேரத்தில் ஒட்டுமொத்த நகரத்திற்கும் மின்சாரம் வழங்குவது சாத்தியமில்லாத அசாதாரண சூழல் நிலவியது. இதனால் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர, மரப்பாலம், வெங்கட்டா நகர், காலாப்பட்டு துணை மின் நிலைய பகுதிகளில் உள்ள வீடுகளுக்கும், அனைத்து நுகர்வோர்களுக்கும் சுழற்சி முறையில் மின்விநியோகம் கொடுக்கப்பட்டது.

நேற்று காலையிலும் மின்தடை நீடித்ததால் வணிக வளாகங்கள், சிறிய தொழிற்சாலைகள், அன்றாடத் தொழில் செய்வோர் என, நகரின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியது. மீண்டும் சுழற்சி முறையில் இப்பகுதிகளில் மின்சாரம் கொடுக்கப்பட்டு வந்தது. ஒருவழியாக நேற்று மாலை 6.30 மணிக்கு அனைத்து பகுதிகளுக்கு சீரான மின் விநியோகம் கொடுக்கப்பட்டு நிலைமை சரியானது.

அதிகாரி விளக்கம் மின் துறை கண்காணிப்பாளர் பொறியாளர் கனியமுதன் கூறுகையில், 'மத்திய தொகுப்பில் இருந்து புதுச்சேரிக்கு வரும் மின்சாரம் வில்லியனுார், தொண்டமாநத்தம், பாகூர் துணை மின் நிலையம் ஆகியவை வழியாக புதுச்சேரியின் மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இதில் வி ல்லியனுா ரில் உள்ள 230/110 கே.வி-100 எம்.வி.ஏ., திறன் கொண்ட மெகா டிரான்ஸ்பார்மர் நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு வெடித்து சிதறி பழுதானது. உடனடியாக மின் துறை சரி செய்ய நடவடிக்கை எடுத்தது. மின் துறை ஊழியர்கள் இரவு பகலாக பணியாற்றி அனைத்தையும் சரி செய்தனர்.

பழுதான மெகா டிரான்ஸ்பார்மர் 85 டன் எடை கொண்டது. இதில், 200 பாரல் அளவிற்கு ஆயில் கொண்டது. வெடித்து சிதறியதால் 25 பாரல் அளவிற்கு ஆயில் இழப்பு ஏற்பட்டது. புதுச்சேரி மின் து றை ஊழியர்களுடன் வெளியில் இருந்து ஒப்பந்த ஊழியர்கள் வரவழைக்கப்பட்டனர். வெப்பப்படுத்தி சர்குலேஷன் முறையில் ஆயில் நிரப்பி, அனைத்து தொழில்நுட்ப கோளாறுகளும் சரி செய்யப்பட்டன.

ஓவர் லோடு புதுச்சேரிக்கு வழக்கமாக 540 மெகா வாட் மின்சாரம் தேவைப்படுகிறது. இரவில் ஏசி பயன்பாடு காரணமாக புதுச்சேரியின் மின் தேவை 575 மெகாவாட் வரை அதிகரிக்கிறது. லோடு தாங்க முடியாமல் டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறி மின் தடை ஏற்பட்டது. வரும் காலங்களில் இதுபோன்ற தடங்கல்கள் ஏற்படாமல் இருக்கவும், தடையில்லா மின்சாரம் வழங்கவும் மின்துறை அனைத்துத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது' என்றார்.

வீராம்பட்டினத்தில் மின்தடை புதுச்சேரி மரப்பாலம் துணை மின் நிலையத்தில் இருந்து வீராம்பட்டினம் பகுதிக்கு செல்லும் உயர் மின்னழுத்த கேபிள் நேற்று காலை 9:00 மணியளவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால், வீராம்பட்டினத்தில் மின் தடை ஏற்பட்டது.

தகவலறிந்த அரியாங்குப்பம் மின் ஊழியர்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இரவு 10:00 மணி வரை கேபிள் சரி செய்யும் பணி நடந்தது.

இதுகுறித்து, இளநிலைப்பொறியாளர் லுார்துராஜ் கூறுகையில், 'உயர் மின்னழுத்த கேபிளில் அதிக மின்சாரம் சென்றதால் கேபிள் 10 அடி நீளத்திற்கு தீப்பிடித்து எரிந்துள்ளது. கேபிளை மாற்றுவதற்கு டூல்ஸ் இல்லாததால், சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்டு சீரமைக்கப்பட்டது. இதனால் வீராம்பட்டினம் பகுதியில் சுழற்சி முறையில் மின் வினியோகம் செய்யப்பட்டது' என்றார்.

இதே போல், பாகூரில் மரக்கிளை திடீரென முறிந்து விழுந்ததில், மின் கம்பிகள் துண்டிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவி யது.

Advertisement