இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு; இந்தியா ஆதரவு

நியூயார்க்: இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வை எட்டுவதற்கான ஆதரவை தெரிவிப்பதாக ஐநாவில் இந்தியா தெரிவித்துள்ளது.

"மேற்காசியாவில் நீடித்த அமைதிக்கான மத்தியஸ்தம் மற்றும் பேச்சுவார்த்தை" என்ற தலைப்பிலான ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் திறந்தநிலை விவாதத்தில் ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி தூதர் ஹரீஷ் பர்வதநேனி உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது; காசாவில் கடுமையான மனிதாபிமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதற்கு சர்வதேச சமூகத்தின் அவசரக் கவனம் தேவை. பாலஸ்தீனத்தில் நீடித்த அமைதியையும், முன்னேற்றத்தையும் அடைவதற்கான ஒரே வழி இதுதான். இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலம் இரு நாட்டுத் தீர்வை எட்ட வேண்டும்.

எங்களது வருடாந்திர ரூ.47.86 கோடி பங்களிப்பின் முதல் தவணையாக, ரூ.23.93 கோடியை இன்னும் சில நாட்களில் ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி முகமையிடம் ஒப்படைப்போம்.

லெபனான் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும். லெபனானுக்கு இந்தியா மருத்துவ உதவிகளையும் அனுப்ப உள்ளோம். வளைகுடா, அரபிக்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் ஆகியவற்றின் ஸ்திரத்தன்மையைக் குலைக்கும் எந்தவொரு முயற்சிகளையும் இந்தியா தொடர்ந்து எதிர்த்து வருகிறது. கப்பல் மீதான தாக்குதல்களுக்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்து கொள்கிறோம்,இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement