பயிர் சாகுபடியும் நுண்ணுயிரிகளும்

மதுரை, ஜூன் 12 – கைப்பிடி மண்ணில் எண்ணற்ற நுண்ணுயிரிகள் வாழ்வதால் ரசாயன உரம், பூச்சிக்கொல்லி பயன்பாட்டை குறைக்க வேண்டுமென நீர் மேலாண்மை பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் கமலாலெட்சுமி தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: நன்மை செய்யும், தீமை செய்யும் நுண்ணுயிரிகள் மண்ணிலுள்ளன.  முறையற்ற உரமேலாண்மை யுக்திகள், ரசாயன மருந்து பயன்பாடு, தட்பவெப்பநிலை, மண்ணின் தன்மை , கார அமிலத்தில் மாறுபடுதல் காரணங்களால் மண்ணில் நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. விவசாயத்தில் அசோஸ்பைரில்லம், ரைசோபியம், அசட்டோபாக்டர்  போன்ற நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் வளிமண்டலத்தில் உள்ள நைட்ரஜனை மாற்றி தழைச்சத்தாக மண்ணில் நிலைநிறுத்தி தருகிறது. இதனால் 20 சதவீத தழைச்சத்து தேவையை இயற்கையாகவே பூர்த்தி செய்யலாம்.பாஸ்போ பாக்டீரியாவானது மண்ணில் பயிர்களுக்கு கிடைக்காமல் இருக்கும் மணிச்சத்தை பயிர்களுக்கு ஏற்றவாறு கிடைக்கச்செய்கிறது. இந்த பாக்டீரியா மண்ணில் பெருகும் போது இதனால் வெளியிடப்படும் ஆர்கானிக் ஆசிட் மூலக்கூறுகள் மண்ணில் அலுமினியம், இரும்பு, கால்சியம் போன்ற சத்துகளுடன் பிணைந்திருக்கும் மணிச்சத்தை பிரித்து பயிர்களுக்கு  கொடுக்கிறது.

இதன்மூலம் 20 முதல் 40 சதவீதம் வரை மணிச்சத்து  தேவையை குறைக்கலாம். வேம்பூஞ்சை போன்ற நுண்ணுயிரிகள் பயிர்களில் காணப்படும் வேர்களின் எண்ணிக்கையை  அதிகப்படுத்துவதுடன்,  அதன்  நீளம் மற்றும்  சல்லிவேர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதால் பயிர்கள் நீர், ஊட்டச்சத்துகளை எடுத்துக்கொள்ளும் திறன் மேம்படுகிறது.

பயிர்கள் வறட்சியை தாங்குவதோடு நோய், பூச்சித்தாக்குதலை தாங்கி வளரும். மண்ணில் இருக்கும் நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் பல்வேறு நோய் பூஞ்சை, பூச்சிக்காரணிகளை அழித்து பயிர்களை பாதுகாக்கிறது. வளமான மண்ணில் உள்ள இந்த நுண்ணுயிரிகளால் 15 முதல் 25 சதவீத நோய் தாக்குதல் குறையும். மேலும் பயிர்களுக்கு வளர்ச்சி ஊக்கிகளையும் கொடுக்கிறது. மண்ணின் காரஅமில தன்மையை நடுநிலைபடுத்துவதுடன் பல்வேறு அமினோ அமிலங்களையும் பயிர்களுக்கு அளிக்கின்றன என்றார்.

 

Advertisement