தேனுார் கண்மாய்க்கு கிடைக்குமா தீர்வு

சோழவந்தான்: ‘‘தேனுார் கண்மாயை ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்தும், அழிவில் இருந்தும் காக்க வேண்டும்’’ என, விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இங்கு 200 ஏக்கருக்கும் மேலான  பரப்பில் கண்மாய் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இதன் மூலம் பாசன வசதி பெறுகின்றன. கண்மாயை துார்வாரி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனால் துார்ந்துபோய்  தண்ணீர் கலுங்கு வழியாக அடுத்த கண்மாய்க்கு செல்கிறது.

நகரி பகுதிகள் தொழில்மயமாகி வருவதால் நீர்ப்பிடிப்பு பகுதிகளை பலர் ஆக்கிரமிக்க தொடங்கி விட்டனர். இதனை அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. கண்மாய்க்குள் பல ஏக்கரில் கருவேலமரங்கள், முட்புதர்கள் அடர்ந்துள்ளன. இதனால் நீர் பிடிப்பு பரப்பு குறைந்து வருகிறது. 

தேனுார் கால்வாய் கண்மாயின் முக்கிய நீர்வரத்து ஆதாரமாக இக்கால்வாய் உள்ளது. சோழவந்தான் பேட்டையில் பிரிந்து திருவேடகம், தச்சம்பத்து வழியாக கண்மாய்க்கு வந்து சேர்கிறது. முன்பு வைகையாற்றில் மணல்நிறைந்து மேடாக இருந்ததால் கால்வாய் வழியே தண்ணீர் எளிதாகச் செல்லும்.

மணல் அரிப்பு, கொள்ளை போன்றவற்றால் உயரம் குறைந்ததுடன், புதிதாக தடுப்பணை கட்டப்பட்டது. இதன் உயரம் போதாததால் தண்ணீர் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் கால்வாய் செடி, கொடிகள் அடர்ந்து சாக்கடையாக மாறிவிட்டது. இதனை துார்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

கண்மாய் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் கார்த்திகேயன்: பராமரிப்பின்றியும் ஆக்கிரமிப்பாலும் கண்மாய் அழிந்து வருகிறது. ஐந்து மடைகள் பராமரிப்பின்றி செடி, கொடிகள் அடர்ந்து துார்ந்து விட்டன. கண்மாயில் இருந்து வெளியேறும் பாசன கால்வாய்கள் இருக்குமிடம் தெரியாத அளவுக்கு ஆக்கிரமிப்புக்குள்ளாகி இருக்கின்றன. இதனால் விவசாயத்திற்கு தண்ணீர் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 கண்மாய் அருகே உள்ள நிலங்களுக்கே தண்ணீர் கிடைக்கிறது. மற்ற விவசாயிகள் சிரமப்படுகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் கலெக்டர் உத்தரவின் பேரில் கண்மாயை மீன்வளர்ப்புக்கு குத்தகை விடுவது தடை செய்யப்பட்டது. கடந்தாண்டு மீண்டும்  குத்தகைக்கு விடப்பட்டது.

இதனால் அறுவடை காலத்தின் போது மீன்பிடிக்க தண்ணீரை திறந்து விடுவதால் பணிகள் பாதித்து விவசாயிகள் நஷ்டமடைகின்றனர். பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் அலட்சியமாக உள்ளனர். அரசு கண்மாயை சீரமைக்க வேண்டும் என்றனர்.

Advertisement