250 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் அதிகாரிகள் - வியாபாரிகள் 'லடாய்'

வண்ணாரப்பேட்டை: வண்ணாரப்பேட்டை எம்.சி., சாலையில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டப் பணிகளுக்கு இடையூறாக இருந்த 250-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியபோது, வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ராயபுரம் மண்டலம் வண்ணாரப்பேட்டை எம்.சி., சாலையில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், 28 கோடி ரூபாய் மதிப்பில், நவீன நடைபாதை வளாகம் அமைக்கும் பணிகள் நடக்கின்றன.

இந்த சாலையை ஆக்கிரமித்து ஏராளமான கடைகள் செயல்பட்டு வந்ததால், பொதுமக்கள் நடமாட்டத்திற்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த நவம்பரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆனால், மீண்டும் கடைகள் அமைக்கப்பட்டன.

இதை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் நேற்று, 'பாப்காட்' மற்றும் பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் 250-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர்.

அதிருப்தியடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வியாபாரிகள், 'கடைகளை அகற்றுவதால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். அப்பகுதியில் உள்ள வணிக வளாகத்தை புதுப்பித்து கடைகள் அமைக்க அனுமதிக்க வேண்டும் அல்லது ராபின்சன் மைதானத்தில் இடம் ஒதுக்க வேண்டும்' என கோரிக்கை விடுத்தனர்.

மாநகராட்சி அதிகாரிகள், 'நீதிமன்ற உத்தரவின்படி சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன. 'ஸ்மார்ட் சிட்டி' திட்டப் பணிகள் நிறைவடைந்த பின், சாலையோர வியாபாரிகளுக்கான மாற்று இடம் தரப்படும்' என்றனர்.

Advertisement