3 ஆண்டாக கோமாவில் இருந்த தாய்லாந்து இளவரசி காலமானார்

பாங்காக்: தென் கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் மன்னர் மஹா வஜிரலோங்கோர்னின் மகளும், சட்டத்துறை வல்லுநருமான மூத்த இளவரசி பஜ்ரகிதியாபா மஹிடோல், 47, மூன்று ஆண்டுகளாக கோமாவில் இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.

இளவரசி பஜ்ரகிதியாபா மஹிடோல், 2022 டிசம்பரில் ராணுவ கண்காட்சிக்காக நாய் களை பயிற்றுவித்த போது, திடீரென மயக்கமடைந்தார். அரச மாளிகை அவருக்கு, 'மைக்கோபிளாஸ்மா' பாக்டீரியா தொற்று ஏற்பட்டதாக அறிவித்தது.

இது பொதுவாக நிமோனியா வுடன் தொடர்புடையது. அதன்பின், அவரது உடல்நிலை மோசமடைந்து கோமா நிலைக்கு சென்றார்.

இந்நிலையில், பாங்காக் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த இளவரசி பஜ்ரகிதியாபா, நினைவு திரும்பாமலேயே நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். அரச குடும்ப வாரிசாக மட்டுமல்லாமல் சிறந்த வழக்கறிஞராகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும் அவர் திகழ்ந்தார்.

தாய்லாந்தின் நீதித்துறை சீர்திருத்த பணிகளில் தீவிரமாக ஈடுபட்ட அவர், சிறையில் இருக்கும் பெண் கைதிகளின் மறுவாழ்வுக்கு உதவும், 'இன்ஸ்பையர்' என்ற திட்டத்தை தொடங்கி நடத்தினார்.

அவரது முயற்சியால் ஐ.நா., சபை, 'பாங்காக் விதிகள்' எனப்படும் பெண் கைதிகளுக்கான சிறை விதிமுறைகளை அங்கீகரித்து ஏற்றது.

Advertisement