இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை ஒத்திவைப்பு குறித்து ஆலோசனை அமைச்சர் விஸ்வநாதன் தகவல்
கடலுார்: நீட்’ தேர்வு ரத்தான நிலையில், இன்ஜினியரிங் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை ஒத்தி வைப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என, அமைச்சர் விஸ்வநாதன் கூறினார்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கூட்டத்தில் அமைச்சர் விஸ்வநாதன் பங்கேற்றார்.
முன்னதாக அவர், கடலுாரில் நிருபர்களிடம் கூறியதாவது:
மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக கடந்த மே, 3ம் தேதி நாடு முழுவதும் நடந்த ‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவு புகார் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்ஜினியரிங் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை ஒத்தி வைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது குறித்து உயர்கல்வித்துறை செயலருடன் ஆலோசித்து இன்று (நேற்று) அல்லது நாளை (இன்று) முடிவு அறிவிக்கப்படும்.
கடலுார் மாவட்டத்தில் பிறந்த என்னை உயர்கல்வித்துறை அமைச்சராக முதல்வர் விஜயும், காங்., முன்னாள் தலைவர் ராகுலும் நியமித்துள்ளனர். உயர்கல்வித்துறை கண்டிப்பாக வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும். உயர்கல்வித் துறையில் எந்த தவறுகளும், குளறுபடிகளும் நடக்காத அளவிற்கு கவனமாக உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கடலுாரில் காமராஜர் சிலை, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். காங்., மாவட்ட தலைவர் ரங்கமணி, மாநில செயலாளர் சந்திரசேகரன், முன்னாள் எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன், துணை மேயர் தாமரைச்செல்வன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.