தீவிரம்
ரூ. 30.90 கோடியில் நான்கு வழிச்சாலை பணிகள்... சின்னசேலம் நகர போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு
கள்ளக்குறிச்சி: சின்னசேலத்தில் நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் பொருட்டு ரூ.30.90 கோடியில் நான்கு வழி சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எலவனாசூர்கோட்டை, தியாகதுருகம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் ஆகிய பகுதிகளில் புறவழிச் சாலைகள் உள்ளன. இதில் நகரின் வழியே செல்லும் சாலைகள் பல ஆண்டுகளாக மேம்படுத்தப்படாமல் இருந்ததால், அவ்வழியாக செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி, கல்லுாரி வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். குறிப்பாக காலை, மாலை நேரங்கள், முகூர்த்த தினங்கள், பண்டிகை காலங்கள் மற்றும் பிரதான கட்சிகளின் ஆர்ப்பாட்டம், போராட்டம் போன்ற தருணங்களில் கூட்ட நெரிசல் அதிகரித்து நகரமே ஸ்தம்பிக்கிறது. மேலும் நகரில் கடைகள் ஆக்கிரமிப்பு, இடநெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனையொட்டி நகர்புற சாலைகளை நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் நகர்ப்புற சாலைகள் தேசிய நெடுஞ்சாலை துறையின் கட்டுபாட்டில் உள்ளதாக கூறி நெடுஞ்சாலை துறையினர் கண்டுகொள்ளாமல் இருந்தனர். இந்நிலையில் நகர்ப்புற சாலைகள் கடந்தாண்டு நெடுஞ்சாலை துறையின் கட்டுபாட்டிற்குள் வந்தது.
சின்னசேலம் பஸ் நிலையத்தில் பல்வேறு கிராமங்களுக்கும் மற்றும் சேலம், நாமக்கல், கோயம்புத்துார் உள்ளிட்ட பெரு நகரங்களுக்கும் செல்லக்கூடிய பஸ்கள் அவ்வழியாக செல்கிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சின்னசேலத்தை கடந்து செல்லும் நிலையில், இருவழிச் சாலையால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் கடைகள், தனிநபர்கள் ஆக்கிரமிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்தது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வந்தனர். குறுகலான சாலையால் அடிக்கடி நிகழும் விபத்துகளால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், சின்னசேலம் மின்வாரிய அலுவலகம் முதல் அம்மையகரம் வரை 4.7 கி.மீ., துார இரு வழிச்சாலையை சென்டர் மீடியனுடன் கூடிய நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டது. இதற்காக முதல்வரின் சாலை மேம்பட்டு திட்டத்தின் கீழ் ரூ.30 கோடியே 90 லட்சம் நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து வருவாய் துறை மூலம் அளவீடு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. சாலையோரத்தில் இருந்த மின் கம்பங்கள், மின்மாற்றிகள் இடமாற்றம் செய்யப்பட்டு, மரங்களும் அகற்றப்பட்டது. பின்னர் கடந்த பிப்., மாதம் சாலை விரிவாக்கம் பணிகள் துவங்கியது.
இதில் நான்கு வழிச்சாலையின் நடுவே 1.20 மீ மைய தடுப்பு சுவருடன், இரு பக்கங்களிலும் 7.50 மீ அகலத்திற்கு சாலைகள் அமைத்து, அகலப்படுத்தப்படுகிறது. சாலையில் 12 கல்வர்ட் பாலம் ஒரு சிறுபாலம் அகலப்படுத்தி அமைக்கப்படுகிறது.
விபத்துகளை தடுக்கும் பொருட்டு கூகையூர், மூங்கில்பாடி, நைனார்பாளையம், அண்ணா நகர், அம்சாகுளம் மற்றும் ரயில்வே பிரிவு இடங்களில் உள்ள சாலை சந்திப்புகள் அகலபடுத்துதல், சாலையோரம் மழை நீர் வடிகால் வாய்க்கால் அமைக்கப்படுகிறது. தற்போது விரிவாக்கம் பகுதியில் தார்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் சின்னசேலம் நகர சாலை, நான்கு வழிச் சாலையாக மாற்றப்பட்டு வருவதால் அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியள்ளது.
மேலும்
-
கோழிக்கோட்டில் வேகமாக பரவும் நிபா வைரஸ்; தொற்று அறிகுறிகளுடன் 3 பேருக்கு சிகிச்சை
-
மேகதாது விவகாரத்தில் நியாயமான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கும்: அமைச்சர் ஆதவ் நம்பிக்கை
-
காங்கிரஸ் கட்சி முதுகில் குத்தி விடும்; முதல்வர் விஜய் ஏமாந்து விடக்கூடாது: அர்ஜூன் சம்பத்
-
இங்கிருந்து 35... அங்கிருந்து 15 பேர்...: கண்ணுாரில் இருந்து ஜெட்டா சென்று வந்த 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமானம்
-
அரசு பள்ளி மாணவர்கள் 10 பேருக்கு விபத்து காப்பீடு வைப்பு பத்திரம் வழங்கல்
-
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு