பஞ்சாயத்து வாக்காளர் பட்டியலில் ‘மாஜி’ அமைச்சர் பெயர் ‘மிஸ்ஸிங்’

அமேதி: உத்தர பிரதேசத்தில், பஞ்சாயத்து தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில், அதை முன்னிட்டு வெளியான வாக்காளர் பட்டியலில், பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஸ்மிருதி இரானியின் பெயர் விடுபட்டது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள கிராம பஞ்சாயத்துகளுக்கு விரைவில் தேர்தல் நடக்கிறது. 2019 லோக்சபா தேர்தலில், அமேதி தொகுதியில் பா.ஜ., மூத்த தலைவர் ஸ்மிருதி இரானி வெற்றி பெற்றார்.

இதன்பின், கவுரிகஞ்ச் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட மேடன் மவாய் என்ற கிராமத்தில் சொந்தமாக வீடு கட்டி அவர் குடியேறினார். அந்த கிராமத்தின் வாக்காளராக பதிவு செய்த அவர், 2022 சட்டசபை தேர்தல், 2024 லோக்சபா தேர்தலில் அங்கேயே ஓட்டளித்தார். லோக்சபா தேர்தலில் அமேதி தொகுதியில் களமிறங்கிய அவர், காங்கிரசின் கிஷோரி லால் சர்மாவிடம் தோற்றார்.

இந்நிலையில், பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை உ.பி., தேர்தல் கமிஷன் சமீபத்தில் வெளியிட்டது. அதில், அமேதி மாவட்டத்தின் மேடன் மவாய் கிராமத்துக்கான வாக்காளர் பட்டியலில், முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் பெயர் இடம்பெறாதது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து, அமேதி கலெக்டர் சஞ்சய் சவுகான் கூறுகையில், ‘‘இச்சம்பவம் குறித்து விசாரணை நடக்கிறது. முழு விசாரணைக்கு பின்னரே பெயர் விடுபட்டதற்கான காரணம் தெரியவரும்,’’ என்றார்.

அமேதி மாவட்ட பா.ஜ., தலைவர் சுதன்ஷு சுக்லா கூறுகையில், ‘‘ஸ்மிருதி இரானியின் பெயரை பஞ்சாயத்து வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளோம். உரிய சரிபார்ப்புக்கு பின், பெயர் சேர்க்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்,’’ என்றார்.

Advertisement