சிறுமி கொலை வழக்கு

காடுகோடி: பெங்களூரில், 6 வயது குழந்தை கொலை வழக்கை, பதிவு செய்வதில் தாமதம், கடமையில் அலட்சியம் காட்டிய காடுகோடி போலீஸ் நிலைய முன்னாள் இன்ஸ்பெக்டர், தற்போதைய எஸ்.ஐ., உட்பட மூன்று பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.

காடுகோடியில் வசித்து வரும் பிரியங்கா, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்கிறார். அவரும், மோகன் என்பவரும் 'லிவிங் டூ கெதர்' முறையில், சேர்ந்து வாழ்ந்தனர். இருவரும் காசியில் ரகசிய திருமணமும் செய்து கொண்டனர்.

கடந்த மார்ச், 24ம் தேதி சிறுமி வெண்ணிலா, மர்மமான முறையில் இறந்தார். மகளின் இறப்பில் சந்தேகமடைந்த அவரது தந்தை பிரவீன், காடுகோடி போலீசில் புகார் செய்தார்.

இதற்கிடையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்ததாக குறிப்பிடப்பட்டது. இதையடுத்து, மோகன் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக இருந்த பிரியங்கா, நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.

இவ்வழக்கில் ஆரம்ப விசாரணையில் எந்த முன்னேற்றமும் கிடைக்காததால், விசாரணை குழுவை, நகர போலீஸ் கமிஷனர் சீமந்த் குமார் சிங் மாற்றினார். அதன் பிறகே, பிரியங்கா கைது செய்யப்பட்டார்.

குழந்தை கொலை வழக்கு பதிவு செய்வதில் தாமதம், கடமையில் அலட்சியம் காட்டிய காடுகோடி போலீஸ் நிலைய முன்னாள் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி, எஸ்.ஐ., நிங்கராஜு, ஏட்டு உட்பட, மூன்று பேரை சஸ்பெண்ட் செய்து, நகர போலீஸ் கமிஷனர் சீமந்த் குமார் சிங் உத்தரவிட்டு உள்ளார்.

Advertisement