கோவில் நில ஆக்கிரமிப்பு கும்பல் அரசுக்கு எதிராக பிரசாரம் : முறியடித்து நிலத்தை மீட்க பக்தர்கள் வலியுறுத்தல்

13


நமது நிருபர்




நாகை மாவட்டம் வேதாரண்யேஸ்வரர் கோவில் நிலத்தை ஆக்கிரமித்துள்ள கும்பல், அதை மீட்பதற்கான அரசு நடவடிக்கையை எதிர்த்து தவறான பிரசாரத்தை செய்து வருகிறது. இதை முறியடித்து நிலத்தை மீட்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் பிரசித்தி பெற்ற வேதாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில், நாயன்மார்களால் பாடப்பெற்றது. ஏழு திருமுறைகளிலும் போற்றி பாடப்பட்டுள்ள ஒரே கோவில் இதுதான்.
தொல்லியல் துறையால் பதிவு செய்யப்பட்ட 88 கல்வெட்டுகள் இந்த கோவிலில் உள்ளன.

இந்த கல்வெட்டுகள் சோழ மன்னர்களான ஆதித்ய சோழன், முதலாம் ராஜராஜ சோழன், முதலாம் ராஜேந்திர சோழன், குலோத்துங்க சோழன் ஆகியோர் காலத்தை சேர்ந்தவை.
இந்த கல்வெட்டுகளில் கோவில்களுக்கு ஏராளமான மானியங்கள் வழங்கப்பட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

அவ்வாறு மன்னர்களாலும், அவர்களுக்குப் பின் வந்த கொடை வள்ளல்களாலும் வழங்கப்பட்ட ஏராளமான நிலங்கள் இன்று ஆக்கிரமிப்பில் உள்ளன. அந்த நிலங்களை மீட்பதற்கான முயற்சிகளை அறநிலையத்துறை இப்போதுதான் தொடங்கியுள்ளது. அதற்கு ஆரம்பத்திலேயே முட்டுக்கட்டை போடும் விதமாக, சமூக வலைத்தளங்களில் ஒரு சில நபர்கள் பிரசாரம் செய்ய தொடங்கியுள்ளனர்.

அறநிலையத்துறை நடவடிக்கையால் ஆக்கிரமிப்பாளர்கள் பாதிக்கப்படுவதாக பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். அதுவும் ஆக்கிரமிப்பாளர்கள் என்று குறிப்பிடாமல், ஏதோ அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுவது போல பிரசாரம் செய்கின்றனர். இத்தகைய கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க வேண்டும் என்று ஆலய வழிபடுவோர் சங்க தலைவர் டி ஆர் ரமேஷ் அறநிலையத்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது: ஸ்ரீ வேதாரண்யேஸ்வரர் கோயில் நிலங்களை ஆக்கிரமிக்கும் கோயில் விரோத கும்பல், நிலத்தை மீட்க முயற்சிக்கும் அறநிலையத்துறை நடவடிக்கைக்கு எதிராக பிரசாரம் செய்து வருகிறது. ஜெஹபர் ஷெரிப் என்ற நபர், ஏதோ 120 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை அறநிலையத்துறை அநியாயமாகப் பிடுங்குவது போல் பொய்யாகச் சித்திரத்துள்ளார்.

இந்த 120 குடும்பங்களும் ஸ்ரீ வேதாரண்யேஸ்வரர் கோயில் நிலங்களைப் பல ஆண்டுகாலமாக வேண்டுமென்றே ஆக்கிரமிப்பு செய்து பக்கா மாடி வீடுகள் கட்டி வைத்துள்ளனர்.
இந்த கும்பல், ஹிந்து கோவில்களையும், ஹிந்து மதத்தையும் மதிக்காத ஒரு கும்பல்.
அவர்கள் வெளியிட்ட சித்தரிப்பு படத்தில் ஒரே ஒரு இஸ்லாமியப் பெண் இருப்பதாகப் போட்டு, மற்றவர்கள் எல்லாம் பெரும்பான்மை ஹிந்துக்கள் போல் காட்டியுள்ளார். உண்மை இதற்கு நேர் மாறாக உள்ளது.

இந்த கோவில் சொத்து ஆக்கிரமிப்பாளர்களில் எவ்வளவு இஸ்லாமியர்கள் இருக்கின்றனர் என்று யோக்கியனாக இருந்தால் ஷெரிப் சொல்லட்டுமே. "பல ஆண்டுகளாக வசித்து வரும்" என்பதற்கு பதிலாக "பல ஆண்டுகளாக கோவில் சொத்தை ஆக்கிரமித்து பக்கா மாடி வீடுகள் கட்டி வசித்து வரும்" என்று யோக்கியனாக இருந்தால் அந்த நபர் போட்டிருப்பார்.

விலை கொடுத்து முறையாகப் பெற்ற சொத்தின் உரிமை சாதாரண உரிமையாக அரசியல் சட்டம் 300-A ஷரத்தின் கீழ் வரும். ஒரு கோயிலின், மசூதியின், சர்ச்சின் சொத்துரிமை அரசியல் சட்டம் ஷரத்து 26ன் கீழ் அந்த மத நிறுவனத்தின் பாதுகாக்கப்பட்ட, உறுதி செய்யப்பட்ட அடிப்படை உரிமை ஆகும்.

வெகு நாட்கள் கழித்து, சட்ட வழிமுறைகளைப் பின்பற்றி ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற அறநிலையத்துறை இப்போதுதான் நடவடிக்கை எடுக்கிறது. அதை, "மக்கள் கேட்கும் கேள்விகள்" "மக்களின் நியாயமான கோரிக்கைகள்" எனப் போலியாக இவர் சித்தரிக்கிறார்.
இந்த ஆக்கிரமிப்பாளர்கள் வடமறைக்காடு கோவிலையே வேதாரண்யத்தில் ஆக்கிரமித்துள்ளனர் என்பதையும் மறைத்துப் பேசுகிறார்.

மாற்று இடம் தர வேண்டும் என்று கேட்பதிலேயே இவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்பதைப் பச்சையாக ஒத்துக் கொண்டுள்ளார். தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு இவர்களைக் கோயில் நிலங்களில் இருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும். இவர் சமூகத்தைச் சேர்ந்த பலரைத் திரட்டி வெளியேற்று நடவடிக்கைகளை முடக்க முயல்வதாகச் செய்தி வருகிறது.
சட்டப்படி அரசு அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கைகளை, சட்ட விரோதமாக எதிர்ப்பவர்களைச் சிறையில் தள்ள வேண்டும். இவ்வாறு ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Advertisement