மடிவாளா குண்டு வெடிப்பு குற்றவாளி தீர்ப்பு வருவதற்கு முன் உயிரிழப்பு
பெங்களூரு: பெங்களூரின் மடிவாளா குண்டு வெடிப்பில் தொடர்பு கொண்ட, பயங்கரவாதி அப்துல் காதர், தீர்ப்பு வெளியாவதற்கு முன்பே, சிறையில் உயிரிழந்தார்.
கடந்த, 2008ம் ஆண்டு, ஜூலை 25ம் தேதியன்று, பெங்களூரின் கோரமங்களா பஸ் டிப்போ, மைசூரு சாலை, விட்டல் மல்லையா சாலை உட்பட, ஏழு இடங்களில் தொடர் குண்டு வெடிப்புகள் நடந்தன. இதில் ஒருவர் உயிரிழந்தார். பலர் படுகாயமடைந்தனர்.
குண்டு வெடிப்பு தொடர்பாக, விசாரணை நடத்திய என்.ஐ.ஏ., எனும் தேசிய விசாரணை குழுவினர், பயங்கரவாதிகள் பலரை கைது செய்திருந்தனர். மடிவாளாவில் நடந்த குண்டுவெடிப்பில் தொடர்பு கொண்ட அப்துல் காதர், 60, என்பவரும் கைதாகியிருந்தார். இவர், குடகு மாவட்டம், விராஜ்பேட் தாலுகாவில் வசித்தவர்.
கடந்த, 2010ம் ஆண்டில் இருந்து, பெங்களூரின் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் இருந்தார். இவர் மீதான விசாரணை, இறுதி கட்டத்தில் இருந்தது. இன்னும் சில நாட்களில் தீர்ப்பு வெளியாகவுள்ளது.
இந்நிலையில் நேற்று மதியம், அப்துல் காதருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இருதயத்தில் வலி ஏற்பட்டதால், சிறை அதிகாரிகள் உடனடியாக ஜெயதேவா மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
ஆனால் வழியில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக, விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. அவரது குடும்பத்தினருக்கு சிறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.