திமுக.,வில் இனி 10 துணை பொதுச்செயலர்கள்: ஸ்டாலின் புதிய முடிவு

52

- நமது நிருபர் -

தி.மு.க.,வில் துணை பொதுச்செயலர்கள் எண்ணிக்கையை உயர்த்த, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் மு டிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தி.மு.க.,வில் துணை பொதுச்செயலர்களாக கனிமொழி, பெரியசாமி, ராஜா, சிவா, அந்தியூர் செல்வராஜ், பொன்முடி, சாமிநாதன் ஆகியோர் உள்ளனர்.

முஸ்லிம், கிறிஸ்துவ மதத்தினருக்கும், தேவேந்திரகுல வேளாளர், நாடார், நாயுடு சமுதாயத்தினருக்கும் பிரதிநிதித்துவம் அளிப்பதற்காக, துணை பொதுச்செயலர் எண்ணிக்கையை உயர்த்த தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.

தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
சட்டசபை தேர்தலில், சமூக பிரதிநிதித்துவ அடிப்படையில் வேட்பாளர்களை தமிழக வெற்றிக் கழகம் நிறுத்தியதால், அக்கட்சி வெற்றி பெற்று, ஆட்சியை கைப்பற்றி உள்ளது. மதம், ஜாதி ரீதியான ஓட்டு வங்கி குறைந்தது, தி.மு.க., தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

கிறிஸ்துவர் ஓட்டுகள் த.வெ.க.,வுக்கு சென்று விட்டன. தி.மு.க., கூட்டணியில், 22 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த முஸ்லிம் லீக் கட்சியும் வெளியேறி விட்டது. எனவே, துணை பொதுச்செயலர் பதவியில் கிறிஸ்துவ, முஸ்லிம் மதத்தினருக்கு பிரதிநிதித்துவம் தர வேண்டிய நிர்ப்பந்தம், தி.மு.க., தலைமைக்கு ஏற்பட்டுள்ளது.

தற்போது, துணை பொதுச்செயலர் பதவியில், முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த பெரியசாமி, சிவா உள்ளனர். தலித் சமுதாயத்திற்கு ராஜா, கவுண்டர் சமுதாயத்திற்கு சாமிநாதன், அருந்ததியர் சமுதாயத்திற்கு அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் உள்ளனர்.

அதனால், நாடார், நாயுடு, தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தினருக்கு பிரதிநிதித்துவம் தரும் வகையில், துணை பொதுச்செயலர் எண்ணிக்கையை ஏழில் இருந்து 10 ஆக உயர்த்த, ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement