கள்ளக்குறிச்சியில் காவலர் சமுதாய கூடம் அமைக்கப்படுமா?   

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் காவலர் சமுதாய கூடம்(காவலர் மண்டபம்) கட்டடம் அமைப்பதற்கு காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு கடந்த 2019ம் ஆண்டு முதல் மாவட்டம் இயங்கி வருகிறது. மாவட்ட உதயத்திற்கு பிறகு அரசு மற்றும் அரசியல் கட்சிகள் தொடர்பான பல்வேறு நிகழ்வுகள் பெரிய அளவில் நடந்து வருகிறது. கலெக்டர் அலுவலகம் முன்பு அரசியல் கட்சியினர், சங்கத்தினர், அமைப்புகள் என பல்வேறு தரப்பில் சாலை மறியல், ஆர்ப்பாட்டம், முற்றுகை போராட்டங்கள் நாள்தோறும் ஏதேனும் ஒரு போராட்டம் நடக்கிறது. 

மாவட்டத்தில் நடக்கும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டம் உட்பட அனைத்து வகையான நிகழ்வுகளுக்கும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இதில் மாவட்ட, மாநில அளவில் நடக்கும் பிரதான அரசியல் கட்சி தலைவர்களின் பொது கூட்டம், போராட்டம், சாலை மறியல் உள்ளிட்டவைக்கு கூடுதல் போலீசார் தேவைபடுகிறது. அதேபோல் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு, விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் உள்ளிட்ட பல்வேறு பண்டிகை காலங்களிலும், தேர்தல் நேரங்களிலும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள ஆயுதப்படை போலீசாரும், வெளிமாவட்டத்தில் இருந்து காவலர்களும் வரவழைத்து தங்க வைக்கப்படுகின்றனர். 

அவ்வாறு வரவழைக்கப்படும் போலீசார் நகரில் உள்ள தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்படுகின்றனர். திருமண மண்டபத்தில் நிகழ்ச்சிகள் நடக்கும் நாட்களில், அங்கு தங்கியுள்ள போலீசார் வேறு மண்டபத்திற்கு இடமாற்றம் செய்யப்படுகின்றனர். இதனால், பல நாட்கள் தொடர்ந்து தங்கி பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் பல்வேறு அசவுகரியங்களை (தர்ம சங்கடம்) சந்திக்க நேரிடுவதுடன், வீண் அலைச்சலையும் ஏற்படுத்துகிறது. எனவே, அனைத்து வசதிகளுடன் கூடிய காவலர் சமுதாய கூடம்(காவலர் மண்டபம்) கட்டடம் அமைப்பதற்கு  காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

Advertisement