ஓராண்டில் தமிழகம் வழியாக 23 புதிய ரயில்கள் அறிமுகம்

1

சென்னை: 'கடந்த நிதியாண்டில், தமிழகம் வழியாக 23 புதிய ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன' என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை:

தெற்கு ரயில்வே, பயணியரின் வசதிக்காக, கடந்த 2025 - 26ம் நிதியாண்டில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தமிழகம் வழியாக 23; கேரளாவில் 14; கர்நாடகாவில் 5 புதிய ரயில் சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

அவற்றில் முக்கியமாக, நாட்டின் தென்முனையான நாகர்கோவிலை இணைக்கும் வகையில், நியூ ஜல்பாய்குரி -- நாகர்கோவில் அம்ரித் பாரத் ரயில், நியூ ஜல்பாய்குரி - திருச்சி, தாம்பரம் - திருவனந்தபுரம், போத்தனுார் - தன்பாத் புதிய அம்ரித் பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

உள்ளூர் பயணியருக்காக, சேலம், - ஈரோடு, பாலக்காடு, பொள்ளாச்சி உள்ளிட்ட 'மெமு' ரயில் இயக்கங்களும் தொடங்கப்பட்டன. திருவனந்தபுரம் - மதுரை அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை, ராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்பட்டது.

அத்துடன், திருப்பதி - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் வாரத்திற்கு, 3 நாட்களில் இருந்து 4 நாட்களாகவும், திருச்சி - காரைக்குடி; காரைக்குடி - விருதுநகர் பயணியர் ரயில் தினசரியாகவும் சேவைகள் அதிகரிக்கப்பட்டன.

அதேபோல், பயணியரின் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில், 41 இணை ரயில்களிலும், 7 தனி ரயில்களிலும், கூடுதலாக 95 பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்பட்டன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வேகம் அதிகரிப்பு உள்கட்டமைப்பு மற்றும் சிக்னல் வசதிகள் மேம்படுத்தப்பட்டதால், 80க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் மற்றும் பயணியர் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு, பயண நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

Advertisement