பக்தர்களுக்கு விரைவாக தரிசனம் கிடைக்க ஏ.ஐ., மென்பொருள் உருவாக்கப்படுமா?: அறநிலையத்துறைக்கு ஆலோசனை

5


சென்னை: தமிழக கோவில்களில் தரிசனத்திற்கு டிக்கெட் எடுக்க தாமதம் ஏற்படுவதை தவிர்க்கவும், கோவிலின் தனிச்சிறப்புகளை தெரிந்து, அதற்கு ஏற்ப சேவைகளை பெறவும், சமீபத்திய ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் மென்பொருளை உருவாக்குமாறு, அறநிலைய துறைக்கு, பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தமிழகத்தில் ஹிந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் 43,728 கோவில்கள் உள்ளன.
கோவில்களில் பக்தர்கள் தரிசன டிக்கெட் பெறுவது உள்ளிட்ட வழிபடுவோருக்கான சேவை தகவல் உள்ளிட்ட விபரங்களுக்காக, ஐ.டி.எம்.எஸ்., அதாவது ஒருங்கிணைக்கப்பட்ட கோவில்கள் மேலாண்மை திட்ட மென்பொருளை, என்.ஐ.சி., எனப்படும் தேசிய தகவல் மையம் வாயிலாக, அறநிலைய துறை உருவாக்கி உள்ளது.

பல கோவில்களில் தரிசன டிக்கெட் எடுக்கும்போது, 'சர்வர்' இணையதள இணைப்பு சரிவர கிடைப்பதில்லை. இதனால், டிக்கெட் எடுக்க தாமதம் ஆவதால், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. குறிப்பாக முதியவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.எனவே, சமீபத்திய ஏ.ஐ., தொழில்நுட்பத்திற்கு ஏற் ப, புதிய மென்பொருளை உருவாக்குமாறு, அறநிலைய துறைக்கு, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து, கோவில் பணியாளர்கள் கூறியதாவது: ஐ.டி.எம்.எஸ்., மென்பொருளின், 'மெயின் சர்வர்' சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலைய துறை தலைமை அலுவலக வளாகத்தில் மட்டுமே உள்ளது. ஒவ்வொரு கோவிலுக்கும் கணினி வழங்கப்பட்டுள்ளது.

கணினி வாயிலாக பக்தர்களுக்கு டிக்கெட் தரும்போது, மெயின் சர்வருக்கு சென்று, இணைப்பு கிடைத்தால் தான் டிக்கெட் வழங்க முடிகிறது. இணைப்பில் தாமதம் ஏற்படுவதுடன், சில சமயங்களில் டிக்கெட் வராமல் முடங்கி விடுகிறது.

ஒரு டிக்கெட் வழங்க, இரண்டு - மூன்று நிமிடங்கள் ஆகின்றன. இதனால், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. ஐ.டி.எம்.எஸ்., மென்பொருளில் பல குறைபாடுகள் உள்ளன. அதை, ஒவ்வொரு கோவிலின் தேவைகள் அறிந்து உருவாக்கப்பட்டதாக தெரியவில்லை. 15 ஆண்டுகளுக்கு பின்னோக்கி உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது, ஏ.ஐ., காலத்தில் இருக்கும்போது, அதற்கு ஏற்றவாறு மென்பொருளை மாற்ற வேண்டும். இதற்கு, அறநிலைய துறையின் புதிய அமைச்சர் ரமேஷ் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதிக பக்தர்கள் வரும் முக்கிய கோவில்களில், கோவிலுக்கு உள்ளேயே, 'சர்வர்' உடன் கூடிய இணைப்பு வசதி ஏற்படுத்த வேண்டும். இதனால், சில வினாடிகளில் டிக்கெட் வழங்க முடியும்.

ஒவ்வொரு கோவிலுக்கும் தனி சிறப்பு உள்ளது. அந்த கோவில்களின் சேவைகளை பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ள, ஒருங்கிணைக்கப்பட்ட ஐ.டி.எம்.எஸ்., மென்பொருளில் கூடுதல் வசதிகளை உருவாக்க வேண்டும்.'கூகுள் பே' உள்ளிட்ட, 'டிஜிட்டல்' பண பரிவர்த்தனையில் கட்டணம் செலுத்துவதை முழுவீச்சில் ஏற்படுத்த வேண்டும்.

கோவில்களில் மென்பொருள் தொடர்பான பணிகளை கையாள, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த படித்த இளைஞர்களை பணியில் சேர்க்க வேண்டும். இதுதொடர்பாக ஏற்படும் பிரச்னைகளை கேட்டறிந்து தீர்வு காண, அறநிலைய துறை அலுவலகத்தில் தனி குழுவை நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


@block_G@

முன்பதிவு கட்டணத்திற்கு 'ஸ்மார்ட் கார்டு' வருமா?

பக்தர்கள் அதிகம் வரும் பெரிய கோவில்களில், ஆண்டுக்கு, 1,000 ரூபாய், 2,000 ரூபாய் என, கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தும் வகையில், முன்பதிவு தரிசன 'ஸ்மார்ட் கார்டு' வழங்கும் வசதியை, அறநிலைய துறை ஏற்படுத்த வேண்டும். இதன் வாயிலாக, அந்த கார்டை வாங்கியவர்கள் கோவிலுக்குள் வந்து, 'ஸ்கேன்' கருவியில், 'கார்டை ஸ்கேன்' செய்ததும், தரிசனத்திற்கு விரைவாக அனுப்பலாம். இதனால், கூட்டம் சேர்வது குறையும்.block_G

Advertisement