'யோகா ஒவ்வொரு நாளுக்குமானது' கவர்னர் அர்லேக்கர் பேச்சு

கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலையில் நடந்த சர்வதேச யோகா தின விழாவில், கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் பங்கேற்றார். பல்கலை மற்றும் பள்ளி மாணவ, மாணவியர் 1,564 பேருடன் இணைந்து யோகா பயிற்சி செய்தார்.

முன்னதாக, மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற யோகா தின நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதை மாணவர்களுடன் இணைந்து பார்வையிட்டார்.

நிகழ்வில், கவர்னர் அர்லேக்கர் பேசியதாவது:

நம் பாரம்பரியம், கலாசாரம், யோகாவின் கூறுகளை தன்னகத்தே கொண்டுள்ளன. பிரதமர் மோடி குறிப்பிட்டது போல, யோகம் என்பது ஒன்று கூடுதல்; ஒற்றுமையால் நிற்றல். உடலும் ஆன்மாவும் மேலும் ஒன்றிணைய வேண்டும்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் முனிவர்கள், ரிஷிகள் உடலும் ஆன்மாவும் ஒன்றாக இணைந்தால் ஆரோக்கியத்தை அடையலாம் என்று கூறி வந்துள்ளனர். அவர்கள் ஆக்கித்தந்த யோக கலையை இன்று முழு உலகமும் ஏற்றுக் கொண்டுள்ளது.

பிரதமரின் சீரிய முயற்சியால் யோகா உலகம் முழுக்க கொண்டு செல்லப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையும் ஏற்றுக் கொண்டுள்ளது. யோகா, ஜூன் 21ம் தேதிக்கானது மட்டுமல்ல. 365 நாட்களுக்குமானது.

வயது பேதமின்றி அனைவரும் பயிலலாம். தினமும் யோகா பயிற்சி செய்து, ஆரோக்கிய வாழ்வை வாழ வேண்டும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

தொடர்ந்து, பல்கலை வளாகத்தில் கவனர் அர்லேக்கர் மகிழ மரக்கன்றை நட்டார். மாணவிகளுடன் கலந்துரையாடினார். நிகழ்வில், பல்கலை துணைவேந்தர் (பொ) சுப்பிரமணியன், டீன்கள் வெங்கடேச பழனிசாமி, பாலசுப்ரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement