மேற்கு மாம்பலத்தில் ஆக்கிரமிப்புகளால் 40 அடி சாலை 10 அடியாக குறுகி பாதிப்பு

3

மேற்கு மாம்பலம்: மேற்கு மாம்பலத்தில் உள்ள ஆரியகவுடா சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளால், 40 அடி அகலமிருந்த சாலை 10 அடியாக குறுகியுள்ளது. இதனால், தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கோடம்பாக்கம் மண்டலம், மேற்கு மாம்பலத்தில் உள்ள ஆரியகவுடா சாலை 1.3 கி.மீ., நீளமும், 40 அடி அகலமும் உடையது. மேற்கு சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது.

இதில், லேக் வியூ சாலையில் தொடங்கி சக்ரபாணி தெரு வரை உள்ள பகுதி 134வது வார்டுக்கு உட்பட்டது. சக்ரபாணி தெருவில் இருந்து கண்ணதாசன் தெரு வரையிலான 60 மீட்டர் நீள சாலை, 131, 132 மற்றும் 134வது வார்டுகளின் எல்லைப் பகுதியாக உள்ளது.

இந்த பகுதியில் ஆறுக்கும் மேற்பட்ட வீடுகள், சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் குடிசைகளாக இருந்த இவ்வீடுகள், தற்போது நிரந்தர கட்டடங்களாக மாற்றப்பட்டு உள்ளன. இதனால், 40 அடி அகலமிருந்த சாலை 10 அடியாக சுருங்கியுள்ளது.

ஒரு கார் மட்டுமே செல்லக்கூடிய அளவுக்கு சாலை குறுகியுள்ளதால், காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது; வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி கொள்வதால், வாகன ஓட்டிகள் இடையே வீண் தகராறு, வாக்குவாதம் ஏற்படுகிறது.

ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதி எந்த வார்டுக்கு உட்பட்டது என்பது தொடர்பாக, மாநகராட்சி அதிகாரிகள் தெளிவான முடிவு எடுக்காததால், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலனை கருதி, ஆரியகவுடா சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி, அதன் முழு அகலத்துடன் சாலையை மீட்டெடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்து வருகிறது.

Advertisement