பகுதி நேர நாட்டுப்புறக்கலை பயிற்சி: விண்ணப்பம் வரவேற்பு
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் கலை பண்பாட்டுத் துறை சார்பில் பகுதி நேர நாட்டுப்புறக்கலை பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இதில் சேர ஆர்வமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காஞ்சிபுரம் சதாவரத்தில் அமைந்துள்ள மாவட்ட அரசு இசைப் பள்ளி வளாகத்தில் இப்பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன.
தெருக்கூத்து,கை சிலம்பாட்டம், கூத்து மத்தளம், புலி ஆட்டம் ஆகிய பயிற்சிகள் வாரத்தில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை பகுதி நேரமாக நடைபெறும். 17 வயதுக்கு மேற்பட்ட கலைஞர்கள், கல்லூரி மாணவர்கள், கலை ஆர்வலர்கள் மற்றும் இல்லத்தரசிகள் இதில் பங்கேற்கலாம்.
பயிற்சி கட்டணமாக ஆண்டுக்கு 500 ரூபாய் வசூலிக்கப்படும். எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பயிற்சியின் முடிவில் பல்கலை தேர்வுக்கு அனுப்பப்பட்டு, அவர்களுக்கு முறையான அரசு சான்றிதழ் வழங்கப்படும்.
இதுகுறித்து, கலை பண்பாட்டுத் துறை மண்டல உதவி இயக்குநர் கார்த்திகேயன் கூறியதாவது:
இந்தப் பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்கள், கல்லூரிகளில் பகுதி நேரமாக நாட்டுப்புறக் கலை பயிற்றுவிப்பாளராகவும், ஜவகர் சிறுவர் மன்ற பயிற்சி நிலையங்களிலும் பணியில் சேரலாம்.
ஏற்கனவே இக்கலைகளை அறிந்த பலரிடம் முறையான சான்றிதழ்கள் இல்லாததால் அவர்களால் பணியில் சேர முடிவதில்லை. அத்தகைய சூழலில் உள்ளவர்களுக்கும் இந்த சான்றிதழ் பயிற்சி ஒரு வாய்ப்பாக அமையும்.
எனவே, ஆர்வம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.