அடுத்த பிரிட்டன் பிரதமர்; ஆன்டி பர்னமுக்கு வாய்ப்பு

2

-நமது நிருபர்-

பிரிட்டீஷ் பிரதமர் கேர் ஸ்டார்மர் ராஜினாமாவை அறிவித்த நிலையில், கட்சியின் தலைமை பதவிக்கு போட்டியிடுவதாக, ஆன்டி பர்னம் அறிவித்துள்ளார்.

பிரிட்டனில் 2 ஆண்டுக்கு முன் பிரதமராக பதவியேற்ற கேர் ஸ்டார்மருக்கு, ஆளும் தொழிலாளர் கட்சியில் நாளுக்கு நாள் எதிர்ப்புகள் வலுத்தன. அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து நிராகரித்து வந்தார்.

இந்நிலையில், பிரிட்டனில் மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் நடந்தன.
இதில், மேக்கர்பீல்டு தொகுதி இடைத்தேர்தலில், மூத்த தலைவர்களில் ஒருவரும், மான்செஸ்டர் நகர மேயருமான ஆன்டி பர்னம் போட்டியிட்டார்.

அவர், அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, தொழிலாளர் கட்சியினர் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

இதனால், ஸ்டார்மர் மீதான அதிருப்தியில் இருந்த ஆளும் கட்சி தலைவர்கள் அனைவரும், பர்னம் கட்சி தலைமை பதவிக்கு வர வேண்டும் என்று தங்கள் விருப்பத்தை தெரிவித்தனர்.
தனக்கு ஆதரவு இல்லாததை உணர்ந்த பிரதமர், பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதையடுத்து, ஆளும் தொழிலாளர் கட்சி தலைமை பதவிக்கு போட்டியிடப் போவதாக ஆன்டி பர்னம் அறிவித்தார்.

ஆன்டி பர்னம், ஏற்கனவே இரண்டு முறை தொழிலாளர் கட்சியின் தலைமை பதவிக்கு போட்டியிட்டு தோல்வியுற்றவர். இந்த முறை, அவருக்கு கட்சி தலைவர் பதவியும், பிரதமர் பதவியும் எளிதில் கிடைக்கும் என்கின்றனர், பிரிட்டீஷ் அரசியல் ஆய்வாளர்கள்.

Advertisement