ஆபரேஷன் 'டைகர் நிறைவு; உத்தவ் கட்சி எம்.பி.,க்கள் 6 பேர் ஷிண்டே சிவசேனாவில் ஐக்கியம்
நமது நிருபர்
மஹாராஷ்டிராவில், ஆபரேஷன் டைகர் என்ற பெயரில் ஏக்நாத் ஷிண்டே தரப்பினர் மேற்கொண்ட முயற்சியில், உத்தவ் தரப்பு எம்.பி.,க்கள் 6 பேர் கட்சி மாறினர்.
மஹாராஷ்டிராவில் ஒன்றாக இருந்த சிவசேனா, சில ஆண்டுக்கு முன் இரண்டாக பிளவுபட்டது. கோஷ்டிகளின் தலைவர்களான உத்தவ், ஏக்நாத் ஷிண்டே இருவருமே, தாங்கள் தான் ஒரிஜினல் என உரிமை கொண்டாடினர். எனினும், தேர்தல் ஆணையம் ஏக்நாத் ஷிண்டே தரப்பை ஒரிஜினல் சிவசேனாவாக அங்கீகரித்தது.
லோக்சபா தேர்தலில், உத்தவ் தரப்பில் போட்டியிட்ட 9 பேர் எம்.பி.,க்களாக வெற்றி பெற்றனர். ஆனால், சட்டசபை தேர்தலில் பாஜ- ஏக்நாத் ஷிண்டே தரப்பு சிவசேனா மீண்டும் ஆட்சியை பிடித்தது. இந்நிலையில், உத்தவ் தரப்பில் வெற்றி எம்.பி.,க்களில் 6 பேர், ஷிண்டே தரப்புக்கு ஆதரவாக மாறினர். ஆபரேஷன் டைகர் என்ற பெயரில், பாஜ, ஷிண்டே தரப்பினர் மேற்கொண்ட முயற்சியில், இப்படி கட்சித் தாவல் நடந்துள்ளது.
கடந்த சில வாரங்களாகவே அரசல் புரசலாக வெளியில் கசிந்து வந்த இந்த கட்சித்தாவல் விவகாரம், இன்று வெட்ட வெளிச்சம் ஆனது. எம்.பி.,க்கள் 6 பேரும், ஏக்நாத் ஷிண்டே உடன் ஒரே மேடையில் காட்சியளித்தனர். தாங்கள் ஒரிஜினல் சிவசேனாவில் இணைந்து விட்டதாகவும் அறிவித்தனர்.
இதையடுத்து, கட்சித்தாவல் சட்டப்படி அவர்களின் பதவிகளை பறிக்கப்போவதாக உத்தவ் தரப்பு சிவசேனா அறிவித்துள்ளது.