ஆக்கிரமிப்பால் இருவழிச்சாலை குறுகி ஒரு வழிச்சாலையானது

கூடலுார்: கூடலுார் மாநில நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து 2 வாகனங்கள் கடந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டிருந்த ரோடு ஒரு வாகனம் மட்டுமே செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

கூடலுார் நகராட்சி கேரள எல்லைப் பகுதியில் உள்ளது. வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து தெற்கு மந்தைவாய்க்கால் வரை நகர்ப் பகுதியாக உள்ளது.

அருகில் சுற்றுலா தலங்கள் அதிகமாக இருப்பதால் நகர்ப்பகுதியில் இருவழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுத்து, 2022ல் பணிகள் துவங்கி ஓராண்டில் முடிவடைந்தது.

இருவழிச் சாலையில் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டது.

ஒவ்வொரு பகுதியிலும் 2 வாகனங்கள் செல்லும் வகையில் ரோடு அகலமாக இருந்தது. ஒரு சில இடங்களில் ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றாமல், அதற்கு ஏற்றார் போல் ரோடு அமைக்கப்பட்டது.

கடந்த சில மாதங்களாக ரோட்டோரத்தில் டூ வீலர் ஒர்க் ஷாப், கடைகள், வீடுகள் என ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது. இதனால் ஒரு வாகனம் மட்டுமே செல்லக்கூடிய வகையில் மாறியுள்ளது. மேலும் வாகனம் செல்லாத பகுதியில் மணல்மேவி டூவீலர் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் விபத்துகள் தொடர்ந்து நடந்து வருகிறது. மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி இரண்டு வாகனங்கள் கடந்து செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

Advertisement