வேன் மீது லாரி மோதி ம.பி.,யில் 6 பேர் பலி

சிந்த்வாரா: மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் நின்றிருந்த, 'பிக் - அப்' வேன் மீது லாரி மோதியதில் ஆறு பேர் உயிரிழந்தனர்.

ம.பி.,யின் சிந்த்வாரா மாவட்டத்தில் உள்ள சிந்த்வாரா - பெதுல் தேசிய நெடுஞ்சாலையில் டெம்னி கிராமம் அருகே பிக் - அப் வேன் ஒன்று ஏராளமான தொழிலாளர்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது அதிவேகமாக வந்த லாரியின் இடது பின் பக்க டயர் திடீரென வெடித்தது.

இதில் கட்டுப்பாட்டை இழந்த லாரி, பைக் மற்றும் பிக் - அப் வேன் மீது பயங்கர சத்தத்துடன் மோதியது. இதில் வேன் கவிழ்ந்து, ஒரு பெண் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர்; 21 பேர் காயமடைந்தனர்.

போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு அருகேயுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

சம்பவம் பற்றி அறிந்த முதல்வர் மோகன் யாதவ், விபத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களது குடும்பத்துக்கு தலா 4 லட்சம் ரூபாயும், படுகாயம் அடைந்தோருக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தோருக்கு 50,000 ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

Advertisement